ரஜினியும், பாண்டேவும் யாரு.. உங்களுக்கு தமிழ்நாட்டுல என்ன வேலை.. நாங்க என்ன மடையனா.. கவுதமன் ஆவேசம்
ரஜினி, ரங்கராஜ் பாண்டேவை சரமாரி விமர்சித்துள்ளார் கவுதமன்
சென்னை: "ரங்கராஜ் பாண்டேவும், ரஜினிகாந்தும் இப்படி மாறி மாறி இப்படி புகழ்ந்துக்கறீங்களே, பாண்டேவின் பூர்வீகமான பீகாரில் இப்படி மாறி மாறி பேசுவீங்களா? இல்லேன்னா ரஜினிகாந்தின் பூர்வீகமான மராட்டியத்தில் இதை இப்படி பேசுவீங்களா? உங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டுல வந்து ஏன் இந்த நாடகத்தை நடத்தணும்? இங்க இருக்கிறவங்க எல்லாம் இளிச்சவாயனா? மடையனா?" என்று இயக்குனர் கவுதமன் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளார்.
டைரக்டர் என்பதையும் தாண்டி சிறந்த தமிழ் உணர்வாளராகவும் அறியப்பட்டவர் கவுதமன்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்தவர்... விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருபவர்.. தமிழ் இன உணர்வு, தமிழர் நிலம் உரிமை என தொடர்ந்து மக்களின் நலனில் அக்கறை காட்டுபவர்... தனது பொதுவாழ்க்கையை அரசியல் கட்சி மூலமும் விஸ்திகரித்து செயல்பட்டு வருபவர். ரஜினி ஆனால் சீமான் கொந்தளிப்பதுபோல, இவரும் ஆவேசம் அடைந்துவிடுவார்.
"தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் விவகாரத்தில், ஆணையத்தில் ஆஜராகவே பயப்படும் ரஜினிகாந்தால் எப்படி முதலமைச்சராக முடியும்?" என்று கேள்வியை எழுப்பி ரஜினி தேர்தலில் எங்கு போட்டியிடடாலும் அங்கு நான்தான் எதிர்த்து போட்டியிடுவேன் என்று முழங்கியவர். இந்நிலையில் ரஜினிகாந்த் மீதான சரமாரி விமர்சனத்தை தற்போது முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வ.கவுதமன் சொன்னதாவது:
நல்லகண்ணு
"சமீபத்தில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்துக்கிட்டாரு.. நல்லகண்ணு ஐயாவையும் கூப்பிட்டிருக்காங்க.. யார் நடத்துறது, நடத்துறவங்களுக்கு யார் பணம் தர்றதுன்னு சொல்லாமலேயே நல்லகண்ணு ஐயாவை அந்த விழாவுக்கு கூப்பிட்டிருக்காங்க. இதுக்குள்ள இருக்கிற பெரும் சூழ்ச்சி, கொடூரம், இதெல்லாம் தெரிஞ்சுதான் நல்லகண்ணு ஐயா இந்த விழாவுக்கு வரலைன்னு சொல்லிட்டாரு... ஆனால் இந்த நிகழ்ச்சி பற்றி ஆரம்பத்துலயே தெரிஞ்சு, யார் நடத்துறாங்க, இதுக்கு பின்புலமா இருக்கிறது யார்னு தெரிஞ்சே ரஜினிகாந்த் அவர்கள் விழாவில் அங்க வர்றாரு.
நாடகம்
வந்ததுக்கு பிறகு அங்கே பேசப்படற, நடத்தப்பட்ட நாடகம் இருக்கே... நீங்க எங்க வேணும்னாலும் நாடகம் நடத்துங்க.. எங்களுக்கு கவலை இல்லை.. ஆனால் எங்களை அடிமைப்படுத்த, எங்கள் உரிமையை பறிக்க.. எங்களை மயக்க... நடத்தற நாடகத்தை வேடிக்கை பார்க்க முடியாது.. யார் ரங்கராஜ் பாண்டே? உங்களுக்கு யார் தமிழ்தேசிய தலைவர்கள் எல்லாம் சரியானவர்கள் என்று யார் எடுத்து சொல்வது? அப்படி சொன்னால், ஒட்டுமொத்த தமிழினமும் அதற்கு ஆதரவு தந்ததா அர்த்தமா?
ஸ்டெர்லைட்
தமிழ்தேசிய தலைவர்கள் எல்லாம் ரஜினிகாந்த் அவர்களின் கருத்தை ஏத்துக்கிட்டு வாழ்த்து சொன்னாங்கன்னு எப்படி நீங்க சொல்லலாம்? இந்த போக்கை ரஜினிகாந்த் அவர்கள் நிறுத்திக்கணும்... நீங்க நடத்துற இந்த விழாவுக்கு யார் பணம் குடுக்கிறது? ஈஷா யோகாவுக்கு யார் பணம் தர்றாங்களோ, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 15 உயிர்களை பலி கொடுத்து, எங்க மண்ணுல இருந்து அப்புறப்படுத்தின ஒரு கூட்டம் உங்களக்கு பணம் குடுத்துட்டு இருக்கு... அந்த பணத்தை வெச்சிட்டு இந்த நாடகத்தை நடத்துறீங்க... அதனால பாண்டே அவர்களே, இந்த நாடகத்தை வேற எங்காவது வெச்சுக்குங்க.
ரங்கராஜ் பாண்டே
ரங்கராஜ் பாண்டே பேசும்போது சொல்றார், பிரசாந்த் கிஷோர் என் அண்ணன்தான் என்கிறார், அப்படின்னா பாண்டேவும் கூலிக்கு மாரடிக்க கூடிய கூட்டமா? ரஜினிகாந்த் சொல்றாரு, "சோ இடத்துல இன்னைக்கு யாரும் இல்லை.. அந்த இடத்துக்கு பாண்டே வரணும்.. அடுத்த ஆண்டு இதே மாதிரி விழா நடத்தும்போது சோ நடத்துற விழாவை விட அது பிரம்மாண்டமா இருக்கணும்"னு சொல்றாரு. உடனே அதுக்கு பாண்டே சொல்றாரு, "ரஜினிகாந்த் அவர்கள்தான் முதல்வராக வரணும்" என்று ரஜினிகாந்த்தை வெச்சுக்கிட்டே சொல்றாரு.. அப்படின்னா இவர் சொல்ற கருத்து என்ன? பாண்டே சொல்ற கருத்து என்ன?
முத்து படம்
மாறி மாறி இப்படி 2 பேரும் புகழ்ந்துக்கறீங்களே, பாண்டேவின் பூர்வீகமான பீகாரில் இப்படி பேசுவீங்களா? இல்லேன்னா ரஜினிகாந்தின் பூர்வீகமான மராட்டியத்தில் இப்படி பேசுவீங்களா? உங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டுல வந்து ஏன் இந்த நாடகத்தை நடத்தணும்? இங்க இருக்கிறவங்க எல்லாம் இளிச்சவாயனா? மடையனா? எனக்கு எதுவுமே வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு, நீங்க "முத்து" படத்துல போற மாதிரி, ஒரு அலை.. ஒரு எழுச்சி... ஒரு சுனாமி.. நீங்கதான் ஏற்கணும் என்று சொல்லி உங்க கால்ல விழுந்து எல்லாரும் கதறுவாங்கன்னு எதிர்பார்க்கறீங்களா? தமிழ்நாட்டுல ஒரு நாளும் அது நடக்காது.
விவசாயி
தமிழ்நாட்டில் மானமுள்ள தமிழர்கள் வாழக்கூடிய மண்.. எங்களை ஆள கூடியவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தாலும் மானம் உள்ளவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. இங்க விவசாயி செத்தான், நீங்க கேட்டுக்கல.. மீனவன் செத்தான், அதையும் நீங்க கேட்டுக்கல.. எங்களுக்கு தர வேண்டிய தண்ணியை தரல.. அப்பவும் நீங்க கேட்டுக்கல.. ஸ்டெர்லைட்டு போராடினப்போ சுடுகாடு ஆகுதுன்னு சொன்னீங்க.. இப்போ புரட்சி எழுச்சி செய்யணும்னு சொல்றீங்க.. தமிழ்நாட்டைஎதிர்த்து புரட்சி செய்ய சொல்றீங்களா? மோடி அரசை எதிர்த்து புரட்சி செய்ய சொல்றீங்களா? புரட்சி எங்கிருந்து வரும்? ஜல்லிக்கட்டு சமயத்துல வந்து நின்னீங்களா? ஆதரவு தெரிவிச்சீங்களா? நீங்க சொல்லிதான் அந்த புரட்சி வெடித்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.