டெல்லியில் நடந்த கலவரம் குண்டர்களால் நடத்தப்பட்டது.. இயக்குநர் அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு!
சென்னை: டெல்லி கலவரத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள பல பகுதிகளில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
கண்ணீர்புகைக்குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இந்த கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
கூட்டாக சந்திப்பு
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கலவரத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குநர்கள் அமீர், வெற்றி மாறன் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் இன்று சென்னையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
குண்டர்கள்தான்
அப்போது பேசிய அமீர் டெல்லியில் ஏற்பட் கலவரம் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த குண்டர்களால்தான் நடந்தது என குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, டெல்லியில் நடைபெற்றது இந்து - முஸ்லிம் கலவரம் அல்ல. குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை. 11 மாநிலங்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
அவசியம் இல்லை
ஏப்ரலில் என்ஆர்சி கணக்கெடுப்பு தொடங்கும் போது இதன் பாதிப்புகள் புரியும். நாடு அமைதியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். குடியுரிமை சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. டெல்லி போல தமிழகத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. சிஏஏ பற்றி புரியாமல் அதிமுக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது.
முதல்வர் விளக்க வேண்டும்
தீய சக்திகள் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் முதல்வர் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது? சிஏஏ குறித்து போராட்டம் நடத்துபவர்களிடம் முதல்வர் விளக்க வேண்டும். இவ்வாறு இயக்குநர் அமீர் தெரிவித்தார்.