நடிகர் டி ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. தவிப்பில் ரசிகர்கள்
சென்னை: நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர், சினிமாட்டோகிராபர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி ராஜேந்தர். இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம் உள்ளிட்ட பாசப்பிணைப்புகளை பற்றி சொல்லும் படங்களை இயக்கி நடித்துள்ளார்.
உயிருள்ளவரை உஷாவில் நடித்த நடிகை உஷாவை கரம் பிடித்தார். இவர்களுக்கு சிலம்பரசன், குறளரசன், அகல்யா ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். டி ராஜேந்தர் இயக்கிய படங்களில் இவரது மகன் சிலம்பரசனை சிறு குழந்தை முதலே அறிமுகப்படுத்தினார். அது போல் அவரது இரண்டாவது மகன் குறளரசனையும் நடிக்க வைத்தார்.
ஹெல்மெட் இல்லையா? போலீஸ் என்றும் பார்க்க மாட்டோம் - சமூகவளைதள பதிவுகளை வைத்து நடவைக்கை- ஆணையர்
அடுக்குமொழி வசனம்
மகள் அகல்யாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்த குழந்தையுடன்தான் சிம்பு அவ்வப்போது விளையாடி இன்ஸ்டாவில் வீடியோ போடுவார். டி ராஜேந்தர் தனது அடுக்கு மொழி வசனத்திற்கு பெயர் பெற்றவர். இவர் சினிமாவில் ஜொலித்தது போல் அரசியலிலும் அடியெடுத்து வைத்தார். திமுகவில் இணைந்த டி ராஜேந்தர் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். பின்னர் திமுகவிலிருந்து வெளியேறி 1991 ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் எனும் கட்சியை தொடங்கினார்.
திமுகவிலிருந்து வெளியேறிய டி ராஜேந்தர்
1996 ஆம் ஆண்டு வைகோ திமுகவிலிருந்து வெளியேறியவுடன், திமுகவுக்கே மீண்டும் சென்ற டி ராஜேந்தர் அக்கட்சியில் தனது தாயக மறுமலர்ச்சி கழகத்தை இணைத்தார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு பூங்கா தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார்.
2004 ஆம் ஆண்டு லட்சிய திமுக
இதையடுத்து திமுகவிலிருந்து 2004 ஆம் ஆண்டு மீண்டும் வெளியேறிய இவர் லட்சிய திமுக எனும் அரசியல் அமைப்பை தொடங்கினார். இதையடுத்து 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது லட்சிய திமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளதாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது தெரிவித்திருந்தார்.
டி ராஜேந்தருக்கு உடல்நலக் குறைவு
இந்த நிலையில் மகன் சிம்புக்கு இளைஞர் பட்டாள ரசிகர்கள் இருப்பதால் அவரை அரசியலில் ஈடுபடுத்த டி ராஜேந்தருக்கு விருப்பம் உண்டு. ஆனால் சிம்புவின் விருப்பம் என்னவென வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களாக மருத்துவமனையில் இருப்பதாக சொல்லப்படும் அவர் தற்போது நலமாக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.