வர்மா படம் கைவிடப்பட்டது... நடந்தது என்ன?.. இயக்குனர் பாலா விளக்கம்
சென்னை: படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகியதாக இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.
'அர்ஜுன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் படம் 'வர்மா'. பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில், 'வர்மா'படம் திருப்தி அளிக்காததால் மறுபடியும் படத்தை எடுக்க இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில், 'வர்மா' படம் தங்களுக்குப் போதுமான மகிழ்ச்சியை அளிக்கவில்லை. எனவே, படத்தை வெளியிடாமல் கைவிடுவதாக தெரிவித்தது. மேலும், 'அர்ஜுன் ரெட்டி' தமிழ் ரீமேக்கை புதிதாகத் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, 'வர்மா' படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று இயக்குனர் பாலா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''வர்மா' படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
படைப்பு சுதந்திரம் கருதி, 'வர்மா' படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்றும், கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதியே தயாரிப்பாளருடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, குற்றப்பரம்பரை படத்தை இயக்குவது தொடர்பாக, இயக்குனர் பாரதி ராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மேடையில் பாலா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார் என்பது நினைவிற்குரியது.