ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை கேட்டு.. பாரதிராஜா எப்படி வாழ்த்தி இருக்காரு பாருங்க!
சென்னை: தனது அரசியல் எப்படி இருக்கும் என்பது குறித்து நேற்று கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை ஆர்ஏ புரம் லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முதல்வராக எனக்கு விருப்பம் இல்லை. கட்சி வேறு ஆட்சி வேறு என இரட்டை தலைமை கடைபிடிக்கப்படும்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இரண்டும் ஜாம்பவான்கள். அவர்களை வெல்ல வெறும் சினிமா பிரபலத்தை வைத்து வீழ்த்த முடியாது. அவர்களை வீழ்த்த வேண்டும் என்றால் மக்கள் மத்தியில் எழுச்சி வர வேண்டும். அப்படி ஒரு எழுச்சி வந்தால், நான் நிச்சயம் அன்று அரசியலுக்கு வருவேன். என்னை வருங்கால முதல்வர் என்று சொல்வதை நிறுத்துங்கள். இந்த வயதில் என்னை நம்பி வர இருக்கிறீர்கள். முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. தேர்தல் சமயத்தில் தான் கட்சி பதவிகள், அதன்பிறகு அவை நீக்கப்படும் " என்றார்.
ரஜினிக்கு வரவேற்பு
இந்நிலையில் இத்தனை நாட்களாக ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்த கட்சிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்த பேட்டியை பார்த்த பின் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றன. அண்மையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாராட்டினார். இதே போன்று தான்,அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்! என சீமான் தெரிவித்தார்.
ரஜினி என்ற மனிதம்
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் பாரதிராஜா ரஜினியின்அரசியல் நிலைப்பாட்டை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட, 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்து இருக்கிறேன்.
நாற்காலி கொள்கை
இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.
தமிழனை அமர்த்துவேன்
ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம். ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் 'நாணய அரசியலில்' அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை 'அரசனாக' ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்" என்றார்.