இதுக்கே பயப்படும் ரஜினி... எப்படி முதலமைச்சர் ஆவார்..? -கவுதமன் கேள்வி
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் விவகாரத்தில், ஆணையத்தில் ஆஜராகவே பயப்படும் ரஜினிகாந்தால் எப்படி முதலமைச்சராக முடியும் என தமிழ் பேரரசு கட்சித் தலைவரும், இயக்குநருமான கவுதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி அறவழியில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய பெண்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு ரஜினி மவுனம் காப்பது ஏன் என்றும், இது அவரது நேர்மையற்ற போக்கையே காட்டுகிறது எனவும் சாடினார். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத ரஜினிகாந்த் எப்படி தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்றும், அது நடக்காத காரியம் எனவும் இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பேசிய கருத்துக்கு விளக்கம் கோரி நேரில் ஆஜராகுமாறு ரஜினிக்கு ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில், அங்கு ஆஜராக அச்சப்படும் ரஜினியால் எப்படி முதலமைச்சராக முடியும் என மீண்டும் கேள்வி எழுப்பினார். ஆணையத்தில் ஆஜராகவே பயப்படும் ரஜினியால் நிச்சயம் முதலமைச்சராக முடியாது என்றும், அவரால் நல்லாட்சி கொடுக்க முடியாது எனவும் சாடினார். மக்களை பார்த்தே ரஜினி பயப்படும் போது மக்கள் ஒட்டுக்கள் மட்டும் அவருக்கு எப்படி கிடைக்கும் எனக் கூறினார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வாரம் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட நிகழ்வு கண்டனத்திற்குரியது என்றும், சி ஏ ஏ-வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது நேர்மையற்ற செயல் எனவும் தமிழ் பேரரசு கட்சித் தலைவர் கவுதமன் விமர்சித்தார். தமிழகத்தில் சி ஏ ஏ-வை எதிர்த்து தமிழர்கள் நடத்தும் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் மதித்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி சி ஏ ஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.