ராஜேஷ் குமார் + கே.பாக்யராஜ்.. இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்....!
சென்னை: திரில்லர்களுக்குப் பெயர் போனவர் ராஜேஷ் குமார்.. திரைக்கதைக்குப் பெயர் போனவர் கே.பாக்யராஜ்.. இந்த இருவரும் இணைந்து ஒரு கலக்கலான படத்தைக் கொடுத்தால் அது எப்படி இருக்கும்.. இருவரது ரசிகர்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்பை இந்த ஜாம்பவான்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
திரில்லர் கதை நாயகன் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுத வந்து 50 ஆண்டுகளாகி விட்டன. இதையடுத்து கோவையில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது.
அதேபோல சென்னையிலும் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் கோவையில் இன்னொரு பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை பாராட்டு விழா
அதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமா பாக்யராஜோடு கலந்து கொண்டார். இந்த விழாவின்போது பாக்யராஜ் பேசுகையில், நான் எத்தனையோ கதைகளைப் படமாக்கியுள்ளேன். ஆனால் ராஜேஷ்குமாரின் கதைகளை படமாக்கும் வாய்ப்பு அமையவே இல்லை.
பாக்யராஜ் + ராஜேஷ்குமார்
விரைவில் ராஜேஷ்குமாரின் கதை ஒன்றை படமாக்கப் போகிறேன். இதுதொடர்பாக அவருடன் டிஸ்கஷன் செய்யவுள்ளேன். இது நடக்கும் என்று கூறியபோது கூடியிருந்த அத்தனை பேரும் உற்சாகத்தில் கை தட்டி வரவேற்றனர். அதன் பின்னர் இருவரும் ராஜேஷ் குமாரை அவரது இல்லத்திற்கும் சென்று சந்தித்து அளவளாவினர்.
இருவரும் இணைவோம்
இந்த சந்திப்பின்போது ராஜேஷ்குமாருடன் மனம் விட்டு நீண்ட நேரம் பேசியுள்ளார் பாக்யராஜ். உங்களது கதை ஒன்றைக் கூட படமாக்க வாய்ப்பு அமையாமல் போனது ஆச்சரியம்தான். நிச்சயம் நாம் ஒரு படம் பண்ணுகிறோம். மறுபடியும் நான் கோவை வந்து உங்களைச் சந்திக்கிறேன். கதை ரெடி செய்வோம் என்று கூறி விட்டு போயுள்ளார் பாக்யராஜ்.
பெரும் எதிர்பார்ப்பு
இங்குதான் செம எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பாக்யராஜ் சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவைக் கதைகளுக்குப் பெயர் போனவர். இவரது திரைக்கதையாக்கம் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது. அவரது எத்தனையோ படங்களுக்கு நிகராக ஒரு படம் கூட இன்று வரவில்லை. அந்த அளவுக்கு திரைக்கதையில் மன்னனாக திகழ்ந்தவர் கே.பாக்யராஜ்.
எப்படி இருக்கும்
மறுபக்கம் திரில்லர் கதைகளுக்குப் பெயர் போனவர் ராஜேஷ்குமார். புலனாய்வில் புலி போல கற்பனை செய்யக் கூடியவர். இப்படி இரு வேறு முனைகளில் நிற்கக் கூடிய இந்த இருவரும் இணையும்போது அது எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே செம மாஸாக இருக்கிறது. இந்த தருணத்திற்காகத்தான் திரை ரசிகர்களும் சரி , ராஜேஷ்குமாரின் ரசிகர்களும் சரி காத்துக் கிடக்கின்றனர்.