பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து பா ரஞ்சித்.. 'மாணவர்களை சாதி மதவெறியில் கொல்வது தொடர் கதையாகிறது'!
Recommended Video
சென்னை: கல்வியில் சாதிக்க உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்கர்களை சாதி மத வெறியில் கொல்வது தொடர்கதையாகிவிட்டதாக இயக்குனர் பா. ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று சென்னை ஐஐடியில் எம்ஏ முதலாமாண்டு மாணவி பாத்திமா லத்தீப் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கம், தமிழக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஐஐடி வளாகத்தின் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பாத்திமா லத்தீப் ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன் சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது வேதனையளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " தொடரும் உயர்கல்வி நிறுவன படுகொலைகள். சமூகத்தில் இருக்கும் பல்வேறு தடைகளை தாண்டி, கல்வியில் சாதிக்க பெரும் கனவுகளுடன் உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்கர்களை, இப்படி சாதி மத வெறியில் பாகுபாடு காட்டி கொல்வது தொடர்கதையாகிவிட்டது.
கல்வியறிவில் சாதிப்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, எவரும் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கும் மாணாக்கர்களின் மன உறுதியை திட்டமிட்டே சிதைத்து கொண்டிருக்கிறார்கள். ரோகித் வெமுலாக்கள் வரிசையில் இன்று பாத்திமா லத்தீஃபா..இதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் எல்லோரின் கடமை" என்று தெரிவித்துள்ளார்.