EXCLUSIVE: மோசமாகி வருகிறது சங்க நிலைமை.. உண்ணாவிரதம் இருப்பேன்.. ஆர்.வி. உதயக்குமார்
தயாரிப்பாளர்கள் சங்கம் மீது ஆர்.வி. உதயகுமார் பகிரங்க குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகள் சரியில்லை என்றும், இந்த நிலை தொடர்ந்தால் தான் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
எஜமான், சின்னகவுண்டர் பொன்னுமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ஆர்.வி. உதயகுமார். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் இவரும் ஒரு உறுப்பினராக உள்ளார். 2 தினங்களுக்கு முன்பு ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பில்லா பாண்டி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் சங்கம் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இது குறித்து "ஒன் இந்தியா தமிழ்" சார்பில் அவரிடமே கேட்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்க செயல்பாடுகள், செய்ய வேண்டிய கடமைகள் உள்ளிட்டவற்றை விரிவாக பேசிய உதயகுமார், கூடவே சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் பரிதாப நிலை பற்றியும் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். ஆர்வி. உதயகுமாரின் மனம் திறந்த பேட்டிதான் இது:
கேள்வி: சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது?
சிறு படம், பெரிய படம் என்ற பாகுபாடும் பிரித்து பார்க்கும் ஒரு நிலையும் எப்போதும் இருக்கக்கூடாது என்பதுதான் உண்மை. ஆனால் தற்போது என்ன சூழ்நிலை நிலவுகிறது என்றால், குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு போதுமான வரவேற்பு பட ரிலீசின்போது கிடைப்பது இல்லை. இதற்கு என்ன காரணம் என்றால், தற்போது ஏழெட்டு முன்னணி நடிகர்களின் படம் வெளியிடப்படும்போது அது பெரிய படமாக கருதப்படுகிறது. இந்த பெரிய வியாபார படங்களுக்கும் ஒரு பிரச்சனை இருக்கிறது. என்னவென்றால், அந்த படத்தை அதிக முதலீடு போட்டு எடுத்திருப்பார்கள். அவ்வளவு முதலீடு செய்யப்பட்டு பட லாபத்தை திரும்பவும் எடுக்க வேண்டும் என்றால் நிறைய போராட்டங்கள் உள்ளது. தமிழ் ராக்கர்ஸ், மற்றும் நெட்டில் டவுன்லோடு செய்து படங்களை பார்ப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. இதையும் தாண்டி போட்ட பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் கவலை.
கேள்வி: சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் அவ்வளவு தட்டுப்பாடா?
சிறு பட தயாரிப்பாளர்களை பொருத்தவரை, பெரிய பட்ஜெட் படங்களான விஜய், அஜித், சூர்யா, விஷால் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது குறைந்துவிடுகிறது. நிறைய மற்றும் நல்ல தியேட்டர்கள் இவர்களுக்கு கிடைப்பதில்லை. 1 கோடியிலிருந்து 5 கோடி வரை செலவில் எடுக்கப்படும் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் என்பது குறைந்துவிடுகிறது.
இதில் ஏதாவது நல்ல படங்களாக அமைந்துவிட்டால், உடனே அதையும் டவுன்லோடு செய்து நெட்டில் பார்த்துவிடுகிறார்கள் ஒரு பெரிய படம் வெளியிடுவதானால், அந்த சமயத்தில், மற்றொரு பக்கம் 3, 4 சின்ன படங்கள் வெளியிடலாம், அல்லது ஒரு பெரிய படத்துக்கும் இன்னொரு பெரிய படத்துக்கும் இடைவெளி விட்டு, அந்த இடைவெளியில் சின்ன படங்களை மட்டும் வெளியிடலாம் என்றெல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தில் பேசப்பட்டது. ஆனால் இது நடைமுறைக்கு ஒத்துவரவில்லை என்பதே உண்மை. சின்ன பட்ஜெட் படங்களுக்கு 100 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை. ஆனால் இதுவே பெரிய படங்கள் என்றால் 600, 700 தியேட்டர்கள்கூட கிடைக்கிறது. இந்த பிரச்சனையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
கேள்வி: தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்ட சிறுபட தயாரிப்பாளர்களுக்கு உதவலாமே?
தியேட்டர் உரிமையாளர்களையே அனைவரும் குறை சொல்கிறார்கள். இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. தியேட்டர் அதிபர்கள் தங்கள் அசோசியேஷனில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வாரம் கூட தியேட்டரை மூடிவிடலாம். ஆனால் எடுத்த படத்தை உடனடியாக ரிலீஸ் செய்யாவிட்டால், அந்த தயாரிப்பாளரின் வாழ்க்கையே போய்விடும். இதற்கு ஒரே தீர்வு தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் ஒரு நல்ல புரிதலோடு, அன்பு சகோதரர்கள் போல் செயல்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துவது அவசியம்.
[ கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்.. அடடே காரணம்! ]
கேள்வி: இதற்கு என்னதான் தீர்வு?
இதற்கு பூனைக்கு யார் மணி கட்டுவது என்றால் தயாரிப்பாளர் சங்கம்தான். தயாரிப்பாளர் சங்கம்தான் சரியான நிர்வாகத்தை கையிலெடுக்க வேண்டும். நானும் இதில் நிர்வாக கமிட்டியில் உறுப்பினர்தான். நான் உட்பட தலைவர் முதல் எல்லோருமே முடிவெடுக்க வேண்டும்.ஆனால் பிரச்சனை என்னவென்றால் தயாரிப்பாளர் கூட்டம் என்றால் நிறைய பேர் வருவதே கிடையாது. துணை தலைவர் வருவதில்லை. பிரகாஷ்ராஜ், இயக்குனர் கவுதம் மேனன் உட்பட முக்கியமானவர்கள் வருவதே இல்லை. அதனால்தான் இந்த பிரச்சனையில் தொய்வு ஏற்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்ததால் வன்மையாக கண்டித்தேன். தயாரிப்பாளர் சங்க கூட்டத்தை சரிவர நடத்தாவிட்டால், நானே உண்ணாவிரதம் இருக்க நேரிடும் என்பதை இங்கே நான் குறிப்பிடுகிறேன்.