என் உயிருக்கு ஆபத்து... ட்விட்டரில் இப்படி போட்டதற்கு காரணமே முரளிதரன் சினிமாதான்: சீனுராமசாமி
சென்னை: தம்முடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீரென ட்விட்டரில் பதிவு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி தர்மதுரை, கண்ணே கலைமானே என படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக் காற்று படம் தேசிய விருதுகளை பெற்றது.
தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலம் விஜய்சேதுபதியை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தவர். விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என பட்டம் வழங்கியவர். அண்மையில் முத்தையா முரளிதரன் சினிமா விவகாரத்தில் பட்டும் படாமல் கருத்து தெரிவித்திருந்தார் சீனு ராமசாமி.
மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சண்முகம் சுப்பையா எய்ம்ஸ் உறுப்பினர்- விசிக ரவிக்குமார் எதிர்ப்பு
உயிருக்கு ஆபத்து என ட்வீட்
இந்நிலையில் இன்று காலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் திடீரென "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்." என சீனுராமசாமி பதிவிட்டிருக்கிறார். சீனுராமாசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்வீட் பதிவைத் தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி வீட்டுக்கு போலீசார் விரைந்தனர்.
தொலைபேசி மூலம் மிரட்டல்கள்
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சீனு ராமசாமி சந்தித்தார். இந்த சந்திப்பில் சீனு ராமசாமி கூறியதாவது: முத்தையா முரளிதரன் சினிமா பட பிரச்சனையில் எல்லோரையும் போல விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள் வைத்தேன். அதில் இருந்து தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வருகின்றன.
பிரச்சனையை உருவாக்க முயற்சி
எனக்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை போல இதனை சித்தரிக்கின்றனர். எனக்கும் விஜய்சேதுபதிக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி கூர்மையாக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதுபற்றி விஜய் சேதுபதியிடமும் நான் பேசினேன்.
|
விஜய்சேதுபதி சொன்னது என்ன?
விஜய்சேதுபதியின் ரசிகர்கள் என்னுடைய தம்பிகள். அவர்கள் இதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். நமக்கு இடையே யாராலும் முரண்பாடுகளை உருவாக்க முடியாது என விஜய் சேதுபதியிடமும் என்னிடம் கூறியிருக்கிறார்.
போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார்
ஆபாசவார்த்தைகளால் தொலைபேசியில் நள்ளிரவிலும் மிரட்டல் விடுக்கின்றனர். அதனால்தான் ட்விட்டரில் அப்படி ஒரு பதிவை போட்டேன். இது தொடர்பாக போலீசில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தர இருக்கிறேன். இவ்வாறு சீனுராமசாமி கூறினார்.