விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
பிபிசி வெளியிட்ட மோடி குறித்த ஆவணப்படத்தை பார்ப்பதும், பகிர்வதும் பாசிசத்துக்கு எதிரானது இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தின் தமிழ் மொழியாக்கத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்ட, இயக்குநர் வெற்றிமாறன் தனக்கு எதிராக விமர்சனமே வரக்கூடாது என்று நினைப்பது பாசிசம் என்று கூறினார். இந்த ஆவணப்படத்தை பார்ப்பதும், பகிர்வதும் பாசிசத்துக்கு எதிரானது என்று அவர் பேசினார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டில் அரங்கேற்றப்பட்ட மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இது குறித்து புகழ்பெற்ற பிபிசி தொலைக்காட்சி, குஜராத் கலவரம் குறித்து பிரிட்டன் அரசின் விசாரணை ஆணையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு, "இந்தியா: தி மோடி குவெஸ்டீன்" என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.
“விசிட்” அடித்த வெற்றிமாறன்.. திருமாவளவன் தமிழில் வெளியிட்ட மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் காண வருகை
தடை விதித்த மத்திய அரசு
பிரதமர் மோடியின் பங்கு குஜராத் கலவரத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, 2 பாகமாக வெளியாகி உள்ள பிபிசியின் இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், கேரளா, பஞ்சாப் உட்பட நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னையில் திரையிடல்
சென்னையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆவணப்படம் பார்க்கும் போராட்டத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கத்தை சேர்ந்தவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆவணப்படத்தை போலீஸ் அனுமதியுடன் திரையிட்டனர்.
திருமாவளவன் வெளியிட்ட தமிழ் வெர்சன்
இந்த நிலையில் தமிழில் மொழிபெயர்த்து பிபிசி வெளியிட்ட இந்த ஆவணப்படத்தை வெளியிடுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அந்த வகையில் நேற்று சென்னை அம்பேத்கர் திடலில் "இந்தியா: மோடி என்கிற கேள்வி" என்ற பெயரில் பிபிசி ஆவணப்படத்தை தமிழில் வெளியிட்டார் திருமாவளவன்.
வெற்றிமாறன் பங்கேற்பு
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இயக்குநர் வெற்றிமாறன், மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேந்த பாலசுந்தரம், பத்திரிகையாளர் ஆர்.கே. மார்க்சிஸ் கட்சியின் சாமுவேல் ராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வஹிதா நிஜாம், மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் யாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வெற்றிமாறன் பேச்சு
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்ப்பதும் பகிர்வது பாசிசத்துக்கு எதிரான என்றார். அவர் தனது உரையில், "ஒரு விமர்சனம் வருகிறது. அது நமக்கு ஏற்புடைய விமர்சனமோ.. அல்லது ஏற்பில்லாத விமர்சனமோ.
பாசிசத்தின் அடையாளம்
ஒரு விமர்சனம் வருகிறது என்றால், அதை ஏற்றுக்கொள்வது ஜனநாயக போக்கு. ஜனநாயக அமைப்பு. அதை எதிர்ப்பது, நமக்கு எதிராக விமர்சனமே வரக்கூடாது என்பதும், எந்த ரூபத்தில் வந்தாலும் அந்த விமர்சனத்தை ஒடுக்குவது, குற்றவாளிகள் ஆக்குவது, அந்த விமர்சனத்தை முன் வைப்பவர்களை தேச விரோதிகள் ஆக்குவது பாசிசத்தின் உடைய அடையாளங்கள்.
பாசிசத்துக்கு எதிரானது
இந்த ஆவணப்படத்தை நாம் பார்ப்பது என்பது பாசிசத்திற்கு எதிரான செயலாகவே நான் பார்க்கிறேன். இந்த ஆவணப்படத்தை நாம் பகிர்வதும் பாசிசத்திற்கு எதிரான செயல்பாடாக நான் பார்க்கிறேன். அதை தமிழில் நமக்கு கொடுத்து இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி" என்று கூறினார்.