பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு.. விசு சொல்றதை பார்த்தா... !
சென்னை: "பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா... " என்று தனது பாணியிலேயே டைரக்டர் விசு ஒரு ட்வீட் போட்டுள்ளார். பாஜகவுக்கு பிரச்சாரம் செய்வாராம்.. ஆனால் தமிழிசைக்கு பிரச்சாரம் செய்ய மாட்டாராம்!
பன்முக திறமைசாலி விசு, ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். பாஜகவில் சேர்ந்து 3 வருடம் ஆகிறது. இப்போது திடீரென ஒரு குற்றச்சாட்டை தமிழிசை மீது சுமத்துகிறார்.
அதாவது, "கட்சியில் சேர்ந்து 3 வருடம் ஆகிறது, ஆனால் ஒருமுறை கூட என்னால் மாநில தலைவரை சந்திக்க முடியவில்லை. நான் ஒரு பிரபலமானவன், என்னாலேயே சந்திக்க முடியவில்லை என்றால் சாதாரண மக்கள் எப்படி சந்திப்பார்கள்" என்று கேள்வி எழுப்பினார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை
தமிழிசை
விசு இதோடு விடவில்லை. "பாஜக வேட்பாளர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோரை ஆதாரித்து யூ-டியூப், முகநூலில் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளேன். ஆனால், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன். அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே பிரச்சாரம் செய்வேன்" என்று சொல்லி உள்ளார்.
சொல்லி இருக்கலாமே?
தமிழிசையை 3 வருடமாக பார்க்க முடியாமல் போனது என்ற விசுவின் இந்த வாதத்தை மனசார ஏற்க முடியவில்லை. ஒருவேளை சந்திக்க முடியாமல் போனால், கட்சி தலைமையிடமோ அல்லது செய்தியாளர்களிடமோ விசு இதனை இந்த 3 வருடங்களில் தெரிவித்திருக்கலாம். அல்லது இதே முகநூலில் ஒரு பதிவு போட்டிருக்கலாம். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், திடுதிப்பென்று தேர்தல் சமயத்தில் தமிழிசையை குறை கூறுவது சரியில்லை.
கல்லடி சொற்கள்
இன்று அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து 5 சீட்களை வாங்கி போட்டியிடுகிறது என்றால், அதற்கு முழு காரணம் தமிழிசை என்ற ஒற்றை மனுஷி மட்டுமே! அவர் மீதும், அவர் குடும்பத்து மீதும் மக்களுக்கு இருக்கும் நன்மதிப்பு மட்டுமே. ஆயிரம் கல்லடி சொற்களை, தரக்குறைவான விமர்சனங்களை முகம் சுளிக்காமல் வாங்கிக் கொண்டு, அதைப் பொருட்படுத்தாமல், கட்சியையும் மோடியையும் விட்டுத்தராமல் பாஜகவை தமிழகத்தில் இன்று உச்சரிக்க வைத்தவர் தமிழிசை மட்டுமே!
தூத்துக்குடி
அவர் கேட்ட தொகுதி அவருக்கு ஒதுக்கப்படவில்லை.. மாறாக தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு எதிராக களம் நிறுத்தப்படுகிறார். அப்போதும் கூட அவர் முணுமுணுக்கவில்லை. தைரியமாக தூத்துக்குடியில் களம் கண்டுள்ளார். ஸ்டெர்லைட் உள்ளிட்ட எதிர்ப்புகள் யாவும் தமிழிசை மீதே மொத்தமாக விழுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்த போகிறது. கூட்டணி, சீட் என எல்லா வேலைகளையும் கனக்கச்சிதமாக செய்துவிட்டு, இன்று தமிழிசையை பாஜக ஒதுக்க பார்க்கிறதோ அல்லது இனவாதத்தை கையில் எடுக்கிறதோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது.
பாரபட்ச பேச்சு
விசு, பிரச்சாரம் செய்து அதன்மூலம் ஜெயிக்க வேண்டிய கட்டாயமோ நிர்ப்பந்தமோ தமிழிசைக்கு எப்போதும் கிடையாது. உண்மையில் விசு போட்டியிட்டு, தமிழிசை பிரச்சாரத்திற்கு வந்தால் நிச்சயம் கூடுதல் ஓட்டுக்கள் அவருக்கு கிடைக்கும் நிலைதான் உள்ளது. நாளைக்கு எல்லாரும் சேர்ந்து கொண்டு தமிழிசையை தனிமைப்படுத்தினாலும் சரி, அவர் மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு வரவே வராது. மாறாக விசு போன்றவர்களின் பாரபட்ச பேச்சுதான் சர்ச்சையை சந்தேகமின்றி கிளப்பும்.