பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் 5248 மாணவர்கள் விடுபட்டது ஏன்- அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 5248 மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படவில்லை. இதற்காக காரணம் பற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத பதிவு செய்திருந்த 945077 மாணவர்களில் 5248 மாணவர்கள் மட்டும் ஏன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவில்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகளில் இருந்து இடைநின்ற, பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கவில்லை என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
இன்று காலையில் வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுபட்ட 5248 மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி அரசு தேர்வுகள் துறை இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல்
காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ்
பரவல் தீவிரமடையவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
எல்லோரும் எக்சாமுக்கு ரெடியாகுங்க.. செமஸ்டர் கண்டிப்பா நடக்குமாம்.. யுஜிசி திட்டவட்டமாக அறிவிப்பு
100% மாணவர்கள் தேர்ச்சி
இந்த நிலையில் தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் பட்டியலும் இன்று வெளியானது. காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5248 மாணவர்கள் விடுபட்டவர்கள்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத பதிவு செய்திருந்த 945077 மாணவர்களில் 9,39,829 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 5248 மாணவர்கள் மட்டும் ஏன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவில்லை என்ற குழப்பம் எழுந்தது. கடந்த ஜூலை 4ஆம் தேதி அப்போதைய தேர்வுத்துறை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்ட உத்தரவில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
தேர்ச்சி அளிக்காதது ஏன்
இதனால் அவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ள கல்வியாளர்கள், தேர்வுத்துறை இது குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மொத்தம் 9,39,829 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய நிலையில், 4,71,759 மாணவர்களும், 4,68,070 மாணவியரும் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6,235 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
விடுபட்ட 5248 பேர்
இதனிடையே 27.3.2020 அன்று தேர்வுத்துறை வெளியிட்ட விவரங்களின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 9,45,006 என குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் தேர்வுத்துறை தெரிவித்துள்ள தகவல்களின்படி தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 939,829 என உள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்ககம் தற்போது விளக்கமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
விடுபட்டது ஏன்
அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வெழுத தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 9,45,077. இதில் 231 பேர் தேர்வெழுத பதிவு செய்த பின்னர் இயற்கை மரணம் அடைந்துள்ளனர்.
இடை நின்ற மாணவர்கள்
658 பேர் மாற்றுச்சான்றிதல் பெற்று பள்ளியை விட்டு நின்றுள்ளனர். 4359 பேர் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஒரு பாடங்களை கூட எழுதவில்லை. எனவே, இந்த காரணங்களில் உள்ள 5248 பேரை கழித்து, 9,39,829 பேருக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.