உள்ளாட்சித் தேர்தல்... மாற்றுத்திறனாளிகள் போட்டியிடலாம்... அரசு சட்டத்திருத்தம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளும் நகர்ப்புறங்களில் போட்டியிடலாம் என தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிகள் மும்முரம்
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இம்மாத இறுதியில் மாநில தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக அது தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அரசாணை வெளியீடு
நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதி தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில் இருந்தது. இந்நிலையில் அதில் திருத்தம் செய்யப்பட்டு தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
சம உரிமை
தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் உள்ளாட்சித் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போட்டியிடலாம்
தமிழக மொத்த மக்கள் தொகையில் 3 % பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் செவி திறனற்ற, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் பணியில் ஆர்வமிருப்பின் அவர்களும் இனி தேர்தலில் களம் கண்டு கலக்க முடியும்.