ஆசிரியர் பயிற்சி முடித்த ஒரு மாற்றுத்திறனாளிக்குகூட பணி வழங்காத அரசு உதவி பெறும் பள்ளிகள்.. வழக்கு
சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி முடித்த மாற்றுதிறனாளிகளுக்கும் பணி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வரும் 26ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் காலேஜ் ஸ்டூடன் அண்ட் கிராஜுவேட் அசோசியேசன் ஆப் தி பிளைண்ட் உள்ளிட்ட சங்கங்களின் சார்பாக மணிக்கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தேசிய தகுதி தேர்வில் சுமார் 4 ஆயிரம் பேர் மாற்றுதிறனாளிகள் ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு எந்த பணியும் வழங்கவில்லை.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுதொடர்பாக ஆவணங்களுடன் நிலை அறிக்கை தாக்கல் வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 26 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.