வகை வகையான பொங்கல் கிரீட்டிங்ஸ்.. போஸ்ட்மேனுக்காக தவம் கிடந்த நாளெல்லாம் போச்சு
பொங்கல் வாழ்த்து அட்டைகள் இப்போது காணாமல் போய்விட்டது.
சென்னை: பொங்கல் வாழ்த்து அட்டையை கொடுக்க எப்படா போஸ்ட் மேன் வருவார் என்று எதிர்பார்த்து காத்து கிடந்த காலம் மலையேறிவிட்டது.
அன்றைய பொங்கல் விழா வாழ்த்து அட்டைகளில்தான் ஆரம்பமானது. ஒவ்வொரு பேன்சி ஸ்டோர்களிலும் கூட்டங்கள் நிறைந்து வழிந்தது. சில சமயங்களில் மளிகை கடைகளிலும் வாழ்த்து அட்டைகள் ஒரு ஓரமாக தொங்கி கொண்டிருக்கும். இதை தேடி தேடி செலக்ட் செய்வதற்கு மெனக்கெட்டனர் மக்கள் அன்று.
ஒருவழியாக பிடித்தமான வாழ்த்து அட்டையை தேடிப்பிடித்து, அதில் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை எல்லாம் ஒன்றுவிடாமல் பட்டியலிட்டு, அதற்கு ஸ்டாம்பு ஒட்டி, முதல்வேலையாக போஸ்ட் பாக்சில் தேபிடித்து போட்டு விட்டு திரும்பும்போதுதான் நிம்மதியே வரும்.
இளசுகளின் காதல்
நண்பர்கள், உறவினர்கள், காதலர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொங்கல் அட்டைகள் தயாராகும். அதில் பொங்கலை சிறப்பித்து கவிதை வரிகள் இடம்பிடிக்கும். சில சமயம் இளசுகள் இலைமறை காயாக காதலைகூட இந்த வரிகளுடன் சேர்த்து தெரிவிக்கும் நயமும் அன்று இருந்தது.
உறவு பாலம்
தூரத்து உறவினர்களும் வருடம் ஒருமுறை அனுப்பும் இந்த பொங்கல் அட்டைக்கு நெகிழ்ந்து போய் விடுவர். விட்டு போன, மறந்துபோன, உறவுகளுக்கு பாலமாய் அமைந்தது அன்றைய பொங்கல் வாழ்த்து அட்டைகள். அந்த அட்டைகளில் கடவுள்கள், பொங்கல் பானை, குழந்தைகள் கரும்பு சாப்பிடுவது, அலங்கரித்த மாடுகள் என அழகாய் படங்கள் இடம்பெறும்.
காட்டி மகிழ்வார்கள்
போஸ்ட் மேன் என்ன வாழ்த்து அட்டையை கொண்டு வர போகிறார், யாரெல்லாம் நமக்கு வாழ்த்துசொல்லி இருப்பார்கள், அதில் என்னென்ன படங்கள் இருக்கும் என்றெல்லாம் ஆவல் அலைமோதியது. பள்ளி மாணவர்கள் சிலர் பிடித்த நடிகர், நடிகைகள் படங்கள் உள்ள வாழ்த்து அட்டைகளை சக நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதை வாங்கி பிரித்து பார்த்த மாணவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் அந்த அட்டையை அன்று நாள் முழுவதும் காட்டி மகிழ்வார்கள். இதை வருடம் முழுவதும் பத்திரப்படுத்தியும் வைத்து கொள்வார்கள்.
ஹேப்பி பொங்கல்
ஆனால் இன்று வாழ்த்து அட்டைகளை காணவில்லை. பிள்ளைகளுக்கு காட்டலாம் என்றால் பேன்சி ஸ்டோரில் கூட இந்த அட்டைகள் இருப்பதில்லை. உறவுகளை வளர்த்த அந்த வாழ்த்து அட்டைகளை இன்று தேடினாலும் கிடைப்பதில்லை. வாட்ஸ்அப் உலகில் எல்லாமே மறைந்து கரைந்து போய்விட்டது. ஹேப்பி பொங்கல் என்ற வரிகள் வந்து வாட்ஸ்அப்பை நிரப்பி கொண்டிருக்கிறது. ஆனால் என்னமோ, அந்த வாழ்த்து மனசில் ஒட்டவே மறுக்கிறது!!