அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் பேச தடை?
சென்னை: அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து பேச செயற்குழு கூட்டத்தில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதை அடுத்து அக்கட்சியினுள் முதல்வர் வேட்பாளர் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருப்பது தெரியவந்தது. அதே வேளையில் அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக சிலர் ஈடுபட்டு வருவதும் தெரியவருகிறது.
இந்த நிலையில் சசிகலா சிறைத் தண்டனை முடிந்து வெளியானால் அவர் அதிமுகவில் இணைந்து பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் அந்த பேச்சுக்கே இடம் இல்லை என அதிமுக முக்கிய நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பது தெரிகிறது.
இந்த நிலையில் அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்தும் சில நிர்வாகிகளுக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிகிறது. எனவே இதுகுறித்து யாரேனும் பிரச்சினையை கிளப்பக் கூடும் என்பதால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பேச செயற்குழு கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.