பதவி கேட்கிறாரே செலவு செய்வாரா அவர்..? இ.பி.எஸ். இல்லத்தில் நள்ளிரவு வரை நடந்த விவாதம்..!
சென்னை: அதிமுக செயற்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில் நேற்றிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை ஒன்று நடைபெற்றிருக்கிறது.
அதில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, மற்றும் எம்.பி.க்கள் முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆட்சியை தக்கவைப்பதற்காக நான் பட்ட கஷ்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அண்ணன் பேசிவிட்டார் (ஓ.பி.எஸ்.சை)என அவர்களிடம் மனம் நொந்திருக்கிறார் இ.பி.எஸ்.
"ஊழல், ஊழல் என்றாரே பிரதமர்.. இன்று அதிமுகவுக்கு பாஜக "அன்பு பரிசு" அளித்துள்ளதே.. ஸ்டாலின் பொளேர்
முட்டல் மோதல்
அதிமுக செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற முட்டல் மோதல் ஊரறிந்த விவகாரம். இருவரும் ஒன் டூ ஒன் வாக்குவாதம் செய்துகொள்ளும் அளவுக்கு செல்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அசந்திருந்தால் வார்த்தை பிரயோகம் முற்றி மிகப்பெரிய அரசியல் பிரளயமே நடந்திருக்கும். வைத்திலிங்கமும், முனுசாமியும் நேற்று மட்டும் சமாதானம் செய்யவில்லை என்றால் நிலைமை விபரீதம் அடைந்திருக்கும்.
மூத்த நிர்வாகிகள்
அதிமுக செயற்குழு நேற்று பிற்பகல் 3 மணிக்கு முடிந்த நிலையில் நேற்றிரவு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். அப்போது பேசிய இ.பி.எஸ். சில விவகாரங்களை மனம் விட்டு ஓப்பனாக கூறியிருக்கிறார். குறிப்பாக தேர்தல் செலவு பற்றி நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.
செலவை ஏற்பாரா?
வரும் தேர்தலை பொறுத்தவரை திமுக 180 தொகுதிகளுக்கு குறையாமல் நேரடியாக போட்டியிட உள்ளது. 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத நிலையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் திமுக களமாட உள்ளது. அப்படியானால் நாமும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் செலவை பற்றி கவலைப்படாமல் களமாட வேண்டும். அண்ணன் முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறேன் என்கிறாரே அவர் செலவு செய்வாரா? நீங்களே சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார்.
மனம் நொந்து
இதைக்கேட்ட கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் நீங்க சொல்வதும் வாஸ்தவம் தான் என்பது போல் இழுத்திருக்கின்றனர். அதோடு விடாத இ.பி.எஸ். தென்மாவட்டத்தில் 60 தொகுதிகளுக்கான செலவையாவது அவர் ஏற்றுக் கொள்வாரா எனக் கேட்டுச்சொல்லுங்கள் பிறகு மற்றதை பேசலாம் எனக் கூறியிருக்கிறார். மேலும், ஆட்சியை தக்கவைக்க நான் பட்ட கஷ்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஓ.பி.எஸ். பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என ரொம்பவே மனம் நொந்திருக்கிறார் இ.பி.எஸ். இந்நிலையில் தான் ஓ.பி.எஸ்.ஸை இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளார் வைத்திலிங்கம்.