ரூ. 10 கோடி அபராதம் கட்ட பணம் கொடுத்த அந்த நால்வருக்கு நன்றி சொன்ன சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவிற்கு 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த பணம் கொடுத்த உறவினர்கள் நான்கு பேருக்கு நன்றி சொல்லியுள்ளார் சசிகலா.
சென்னை: சசிகலாவிற்கு அபராதம் கட்ட பணம் கொடுத்து உதவி செய்த உறவினர்கள் நான்கு பேருக்கு வழக்கறிஞர்கள் மூலம் நன்றி கூறியுள்ளாராம் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலாவிற்கு ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பணத்தை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். சசிகலாவுக்கான அபராத தொகையினை பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகிய 4 பேரும் செலுத்தி இருக்கிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா.
தண்டனை காலம் முடிவடைந்துள்ளதால் அபராதத்தொகையினை செலுத்தினால் வரும் ஜனவரி மாதம் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில், அபராத தொகையான 10 கோடி ரூபாயினை செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்திய சசிகலா, சுதாகரன் - விரைவில் விடுதலை
2021ல் சசிகலா விடுதலை
இந்நிலையில் அந்த அபராத தொகைக்கான டி.டியினை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்குமார் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கட்டியிருக்கிறார். இதன் மூலம் சசிகலா வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையாவது உறுதியாகியுள்ளது.
நான்கு பேர் யார்
சசிகலாவுக்கான அபராத தொகையினை பழனிவேல், வசந்தா தேவி, ஹேமா, விவேக் ஆகிய 4 பேரும் செலுத்தி இருக்கிறார்கள். இதில் பழனிவேல் சசிகலாவின் மைத்துனர், வசந்தா தேவி பழனிவேலின் மனைவி, ஹேமா டாக்டர் வெங்கடேசின் மனைவி, விவேக் இளவரசியின் மகன்
டிடி எடுத்த நால்வர்
ஆக்ஸிஸ் வங்கியில் ரூ 3 கோடிக்கு ஹேமா பெயரில் டி.டி. எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்பிஐ வங்கியில் பழனிவேல் பெயரில் ரூ.3.25 கோடி டி.டி. எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி.ஐ. வங்கியில் வசந்தா தேவி பெயரில் 3.75 கோடிக்கான டி.டியும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதே போல், ஆக்ஸிஸ் வங்கியில் விவேக் பெயரில் 10ஆயிரம் ரூபாய்க்கான டி.டியும் எடுக்கப்பட்டுள்ளது.
நால்வருக்கு நன்றி சொன்ன சசிகலா
நீதிமன்றம் விதித்த அபராத தொகை செலுத்தப்பட்டுவிட்டதால் ஜனவரி 27ம்தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று தெரிகிறது. டி.டி. செலுத்தப்பட்ட தகவல் தெரியவந்ததும், சிறை நிர்வாகம் மூலமாக தனது வழக்கறிஞரிடம் பேசி அந்த நாலு பேருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் சசிகலா.
விடுதலைக்குப் பின் எங்கே
சசிகலா விரைவில் விடுதலையாக என்று அவரது உறவினர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அபராதம் கட்டுவதற்காக சொத்துக்களை விற்க நினைத்தார் சசிகலா ஆனால் உறவினர்களே பணம் கொடுத்து விட்டதால் அந்த பிரச்சினை முடிந்து போனது. சசிகலா விடுதலையான பின்னர் மன்னார்குடியில் தங்குவதற்காக வீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் மகள் திருமணம் முடிந்த பின்னர் சென்னைக்கு சசிகலா வர வாய்ப்புள்ளதாக மன்னார்குடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.