ஒரு பக்கம் திவாகரன் கூட்டம்.. மறுபக்கம் தினகரன் ஆட்டம்.. கலகலக்குது மன்னார்குடி!
-கோயா
சென்னை: ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மன்னார்குடியில் மாஸ் கட்ட களம் குதித்துள்ளார் திவாகரன். மறுபக்கம் அவருக்கு குடைச்சலைக் கொடுக்கும் வேலையில் குதித்துள்ளாராம் தினகரன்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, சிறை வாழ்க்கையை காட்டிலும் தனது குடும்ப உறுப்பினர்களை நினைத்து அதிகம் கவலைப்படுகிறாராம்.
சிதறு தேங்காய் போல, தன் கண் முன்னால் குடும்ப ஒற்றுமை ஒருகுலைந்து போவதை சசியால் தாங்கமுடியவில்லையாம். இந்நிலையில், திவாகரனுக்கும், தினகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக கூறுகிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தினர்.
மன்னார்குடியில் திவாகரன் கூட்டம்
அண்ணா திராவிடர் கழகம் சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை பிப்ரவரி 24-ம் தேதி மன்னார்குடியில் நடத்துகிறார் திவாகரன். அதற்கான ஏற்பாடுகளை முழு மூச்சாக கவனித்து வரும் அவர், ஒரு லட்சம் பேரை திரட்டி தனது பலத்தை தினகரனுக்கும், மோடிக்கும் காட்ட வேண்டும் என நினைக்கிறாராம்.
ஆளுங்கட்சி ஒத்துழைப்பா
மன்னார்குடி தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சி தரப்பில் இருந்து எந்த முட்டுக்கட்டையும் கிடையாதாம். இதே மன்னார்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினகரன் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்காதது குறிப்பிடத்தக்கது.
ஜெய் ஆனந்த் தீவிரம்
கடந்த வாரம் டெல்லி சென்று பியூஸ் கோயல் உள்ளிட்ட பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து பேசிய திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், ஜெ.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கான அழைப்பிதழும் வழங்கியதாக கூறப்படுகிறது.
டெல்லிவாலாக்களும் வர்றாங்களோ
பொதுக்கூட்டத்தில் டெல்லிவாலாக்கள் கலந்து கொண்டால் ஆச்சரியபடுவதற்கு இல்லையாம். யார் வருவார் என்பது தெரியவில்லை. ஆனால் சர்பிரைஸாக யாரேனும் வரலாம் என்கிறார்கள்.
பிசுபிசுக்க வைக்க தினகரனும் தீவிரம்
மறுபக்கம் திவாகரன் பொதுக்கூட்டத்தை பிசுபிசுக்க வைப்பதற்கான ஆட்டத்தை தொடங்கியுள்ளாராம் தினகரன். திவாகரன் கூட்டத்துக்கு கூட்டம் சேராதவாறு தினகரன் தரப்பு செய்யும் உள்குத்தை சமாளிக்க மன்னார்குடி தரப்பு படாதபாடு படுகிறதாம்.
ஆயிரம் ஜன்னல் வீடு.. இப்படியெல்லாம் பாட்டுப் பாடி சந்தோஷமா இருந்த குடும்பம்.. ம்ம்.. இப்ப இப்படியாகிப் போச்சே!