தினகரனுக்கு அல்வா.. அதிமுகவிற்கும் சிக்கல்.. அமித் ஷா குட் புக்கில் திவாகரன்.. திடீர் விஸ்வரூபம்
சசிகலா சகோதரர் திவாகரன் வீட்டு இல்ல விழாவிற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
சென்னை: சசிகலா சகோதரர் திவாகரன் வீட்டு இல்ல விழாவிற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து கடிதம் அனுப்பினார். அமித் ஷாவின் இந்த செயல் அதிமுக மற்றும் டிடிவி தினகரன் என்ற இரண்டு தரப்பையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சசிகலா உறவினர்களில் டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் இரண்டு பேரும் மிகவும் பிரபலம் ஆனவர்கள். தமிழக அரசியலில் இவர்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அமமுக மூலம் டிடிவி தினகரன் தமிழகம் முழுக்க பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
அதேபோல் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவாகவும் இவர் மாறினார். ஆனால் அதன்பின் அவரின் அரசியல் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. அவருக்கு பதிலாக தற்போது திவாகரன் லைம் லைட்டிற்கு வந்துள்ளார்.
யார் இவர்?
மன்னார்குடியில் வசித்து வரும் இவர், அங்கு செங்கமலத்தாயார் கல்லூரி உட்பட பல்வேறு நிறுவனங்கள், கடைகளை நடத்தி வருகிறார். சசிகலா அதிமுகவில் இருந்த போதும் சரி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போதும் சரி, திவாகரன் மன்னார்குடியில் தனி ஆவர்த்தனம்தான் நடத்தி வந்தார். அங்கு அவர் எப்போதும் தனி அரசியல் மதிப்புடன் செல்வாக்குடன் சுற்றி வந்தார்.
சசிகலா எப்படி
டிடிவி தினகரனை தொடக்கத்தில் புகழ்ந்து, ஆதரித்து வந்த திவாகரன் போக போக தினகரனை எதிர்க்க தொடங்கினார். அதேபோல் சசிகலா வெளியே வந்தால் தினகரன் அமைதியாவார். அவரால் ஆட்சியை கலைக்க முடியாது. சசிகலா வெளியே வந்தால் எல்லாம் மாறும் என்று அவர் குறிப்பிட்டார். சசிகலாவின் விடுதலைக்காக தற்போது திவாகரன்தான் முயன்று வருகிறார். இதற்காக அவர் புதிய ரூட் ஒன்றை பிடித்துள்ளார்.
சசிகலா விடுதலை
சசிகலா விடுதலை தொடர்பாக இவர் மத்திய பாஜக கட்சியினரை சந்தித்து பேசி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இவர் 7 பாஜக தலைவர்களை சந்தித்து பேசிவிட்டார். அதேபோல் முக்கியமான ஆர்எஸ்எஸ் தலைவர்களையும் சந்தித்து பேசிவிட்டார். தனது மகன் ஜெயானந்த் திருமண விழாவிலும் கூட இவர் சசிகலா விடுதலை குறித்து பாஜக தலைவர்களிடம் பேசி உள்ளார் என்கிறார்கள்.
அமித் ஷா
இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா, திவாகரனுக்கு கடிதம் எழுதினார். திவாகரனை வாழ்த்தி அமித் ஷா இந்த கடிதத்தை எழுதி இருந்தார். இந்த நிலையில் அமித் ஷாவின் குட்புக்கில் திவாகரன் இருக்கிறார். தமிழகத்தில் அவரை பாஜக வளர்த்து விட முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
காரணம் 1
அதற்கு இந்த கடிதம் ஒரு தொடக்கம் என்கிறார்கள். இதற்கு முதல் காரணம் மொத்தமாக டிடிவி தினகரனை ஒடுக்க வேண்டும் என்று பாஜக முடிவு செய்துள்ளது. அவர் பல இடங்களில் பாஜகவிற்கு எதிராக தீவிரமாக உள்ளூர் அரசியல் செய்து வருகிறார். இது திமுகவிற்கு சாதகமாக முடிகிறது. இவரால் ஜாதி வாக்குகள் பிரிகிறது என்று, பாஜக புகார் வைத்துள்ளது. இதனால் தினகரனுக்கு பதிலாக திவாகரனை முன்னிறுத்த பாஜக நினைக்கிறது. திவாகரனும் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்.
முதல்வர்
அதேபோல் அதிமுகவில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பாஜகவிற்கு எதிராக அவ்வப்போது செயல்பட்டு வருகிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் விலகலாம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறுகிறார்கள். அதிமுக தனியாக 2021 தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில், தங்கள் அரசியல் சப்போர்ட்டிற்கு திராவிட சாயல் உள்ள ஒருவர் வேண்டும் என்பதால் திவாகரனை பாஜக ஆதரிக்க தொடங்கி உள்ளது.
டெல்டா மாவட்டம்
அதேபோல் டெல்டா மாவட்டங்களில் திவாகரனுக்கு தீவிர ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். ஜாதி ரீதியாக இவர்கள் திவாகரனை தீவிரமாக ஆதரித்து வருகிறார்கள். இதனால் திவாகரனை ஆதரித்தால் அது தங்களுக்கு பெரிய அளவில் உதவும் என்று பாஜக நம்புகிறது. டெல்டாவில் திமுக, அதிமுக இரண்டையும் சமாளிக்க திவாகரன் நல்ல டிரம்ப் கார்டாக இருப்பார் என்று பாஜக நினைக்கிறது. இதுதான் திவாகரனை பாஜக திடீர் என்று கொண்டாட காரணம் என்கிறார்கள்.
என்ன சமாதானம்
அதேபோல் ஜெயிலுக்கு போன கோபத்தில் இப்போதும் சசிகலா இருக்கிறார். இதனால் அவர் வெளியே வந்தால் அவரை சமாதானம் செய்ய ஆட்கள் தேவை. அதற்கு திவாகரன்தான் சரியான நபர் என்று பாஜக நினைக்கிறது. சசிகலா விடுதலை ஆகி வந்தால் அவருக்கு முக்கிய இடம் அளிக்கவும், ஜெயானந்திற்கு பதவி வழங்கவும் பாஜக திட்டமிடும் என்கிறார்கள். இதற்கு எல்லாம் சரியான நபர் திவாகரன்தான் என்று அமித் ஷா நினைத்ததால்தான் அவருக்கு வாழ்த்து கடிதம் பறந்தது என்கிறார்கள்.