தீபாவளிக்கான ரயில் டிக்கெட்... முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது
Recommended Video
சென்னை: தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன. நெல்லை, பாண்டியன், வைகை விரைவு ரயில்களில் முன்பதிவு மற்றும் காத்திருப்போர் பட்டியலுக்கான முன்பதிவும் நிறைவடைந்தது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் செல்வது வாடிக்கையான ஒன்றாகும். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இதன்படி அக்டோபர் 25-ஆம் தேதி முதல் தொலைதூர ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதற்கான முன்பதிவை இன்று காலை 8 மணிமுதல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25- ஆம் தேதியின் பயணத்துக்கு இன்னும் 120 நாட்கள் உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை. அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக இருக்கும். எனவே அவர்கள் வெள்ளிக்கிழமையே தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு கிளம்புவார்கள். ஆகையால், கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால், சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறத.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன. பல முக்கிய ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல் அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை ஊருக்கு செல்ல விரும்புவோர் நாளை டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதே போன்று தீபாவளி அன்று (அக்டோபர் 27ம் தேதி) பயணம் செய்வதற்கு, ஜூன் 29ம் தேதி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.