தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் தேமுதிக பொறுப்பாளர்களை அறிவித்த விஜயகாந்த்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எந்த அணிக்கு போவது என திக்கு தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறது தேமுதிக. இந்த நிலையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளுடனும் கூட்டணிக்காக அதிதீவிரமான பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக. திமுக கழற்றிவிட்ட நிலையில் வேறுவழியே இல்லாமல் அதிமுகவிடம் தஞ்சம் அடைந்தது அந்த கட்சி.
அதிமுக அணியில் தேமுதிக?
அதிமுக கொடுத்த 4 தொகுதிகளை வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்றும் போனது தேமுதிக. சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
40 தொகுதிகள் கேட்டு பிடிவாதம்
ஆனால் 40 தொகுதிகள் கொடுத்தால்தான் கூட்டணி என அசராமல் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் அவரது மகன் விஜய பிரபாகரனும் பேசி வருகின்றனர். தற்போதைய நிலையில் அதிமுகவோ, திமுகவோ நிச்சயமாக தேமுதிகவுக்கு 40 தொகுதிகளை கொடுக்கப் போவது இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் தேமுதிக ஏதோ ஒரு கணக்கில் 40 தொகுதிகள்தான் என நிபந்தனை விதித்து கொண்டிருக்கிறது.
தேமுதிகவை புறக்கணித்த அதிமுக
போகிற போக்கைப் பார்த்தால் இந்த முறை அதிமுகவும் தேமுதிகவை கழற்றிவிடும் என்றே தெரிகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பிரசார கூட்டத்துக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை. இதனை பிரேமலதா விஜயகாந்தே வெளிப்படையாகவும் சொல்லி இருந்தார்.
|
தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
இதனால் தற்போதைய நிலையில் 3-வது அணி ஏதேனும் ஒன்று உருவானால் அதில் இடம்பெற்று தாங்கள் நினைத்தபடி 40 அல்லது 60 தொகுதிகளை வாங்கி போட்டியிட்டு தோற்பதற்கு தேமுதிக தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. இந்த நிலையில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் விஜயகாந்த். ஒருவேளை 3-வது அணியும் கிடைக்காமல் போனால் தனியாகவே நின்று தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடவும் தேமுதிக தயாராக இருப்பதாகவே தெரிகிறது.