தெம்பே இல்லாட்டியும்.. கெத்துக்கு குறைவில்லை.. 3 மேயர் பதவிகளை கேட்கும் தேமுதிக.. அதிமுக கப்சிப்!
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர், திருச்சி , திண்டுக்கல் ஆகிய 3 மேயர் பதவிக்கான இடங்களை அதிமுகவிடம் தேமுதிக கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தேமுதிகவுக்கு இதுவரை பிடிகொடுக்காமல் அதிமுக இருப்பதாக சொல்கிறார்கள்.
2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் மூன்று வருடங்களுக்கு வரும் டிசம்பரில் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்கிற நிலையில் திமுக மற்றும் அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றன.
உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் போது தான் அந்த கட்சிகளின் அடிமட்ட தொண்டர்கள் பதவிக்கு வர முடியும். இதன்மூலம் கட்சியை கிராமங்கள் மற்றும் வார்டுகள் வாரியாக வளர்க்க முடியும்.
கமல் விழாவில் ரஜினி சல்யூட் அடித்த விருந்தினர்.. இணையம் முழுக்க வைரலாகும் வீடியோ.. யார் அது?
கட்சிகள் ஆர்வம்
இதன் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளுமே ஆர்வம் காட்டிவருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக, அதிகாரத்தில் இருக்கும்போதே உள்ளாட்சிகளில் அதிமுகவை பலப்படுத்த விரும்புகிறது.
மேயர் பதவிக்கு
இந்த சூழலில் அதிமுக ஆட்சியை தக்க வைக்க சட்டமன்ற இடைத்தேர்தலில் அதன் கூட்டணி கட்சிகள் பலம் மற்றும் நம்பிக்கை அளித்தன. இதனால் புதிய உற்சாகத்துடன் அந்த கூட்டணி உள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக ஆகியவை மாநகராட்சி மேயர் பதவிகளை பெற முயற்சித்து வருகின்றன. இதற்காக கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனுக்களை பெறும் பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.
3 மாநகராட்சி
தேமுதிக.வை பொறுத்தவரை திருப்பூர், திருச்சி, திண்டுக்கல் என மூன்று மாநகராட்சிகளை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அதிமுக தலைமையிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தையில் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.
நழுவும் தலைவர்கள்
ஆனால் அதிமுக தலைமையினர் சிரித்துக்கொண்டே நழுவி வருகிறார்களாம். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே கூட்டணி இறுதியாகும் என தெரிகிறது. ஏனெனில் அதிமுக கூட்டணி என்பது பெரிய கூட்டணியாக உள்ளது. குழப்பம் வராத வகையில், பேச்சுவார்த்தையின் மூலம் இடம் ஒதுக்க அதிமுக விரும்புகிறது.
நகராட்சி தலைவர் பதவி
அதேநேரம் தேமுதிக கேட்கும் மாநகராட்சிகளை கொடுப்பதற்கு அதிமுக தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் சீட்டுகளை வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். எனினும் நகராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட சில பதவிகள் அதிமுக தர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.