மதியாதார் வாசல் மிதியாதார்.. விஜயகாந்திடம் மாவட்டச் செயலாளர்கள் குமுறியது என்ன?.. பரபரப்பு தகவல்!
சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என சாமானிய மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என மாவட்டச் செயலாளர்களும் தொண்டர்களும் ஆதங்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் மதிப்பளித்துள்ளதாக நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக , திமுக , மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகியன கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கான தொகுதி பங்கீடு பிரச்சினை குறித்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் தேமுதிகவுடனான தொகுதி பங்கீடு பிரச்சினை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
21 தொகுதிகள்
அதிமுகவிடம் தேமுதிக 41 தொகுதிகள் கேட்ட நிலையில் பின்னர் 23 ஆக குறைத்துக் கொண்டது. பின்னர் 21 தொகுதிகள், ராஜ்யசபா பதவியும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக கோரியது. ஆனால் அதிமுகவோ கறாராக 15 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட ஒதுக்க இயலாது என்பதை தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் 13 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என அதிமுக கறாராக தெரிவித்துவிட்டது.
அதிர்ச்சி
இது தேமுதிகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து தேமுதிக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்தது. இதில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்தார். இதை தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதுகுறித்து தொண்டர்கள் கூறுகையில் ஒரு கூட்டணி கட்சி என்றால் மரியாதை வேண்டும்.
டெபாசிட்
13 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரலாம் என அதிமுக கூறுவது ஆணவத்தை காட்டுகிறது. வரும் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது தேமுதிகவுக்கு விடிவுக்காலம் பிறந்துவிட்டது. அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என பல தேர்தல்களில் தெரிவித்து வருகிறோம்.
பெட்ரோல் டீசல்
பெட்ரோல் டீசல் விலையுயர்வு, கேஸ் சிலிண்டர் விலையுயர்வு, விலைவாசி உயர்வு என சாமானிய மக்களுக்கு தொடர்ந்து சுமையை கொடுத்து வரும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதே நாங்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தோம். நாங்கள் சொன்னத்தை விஜயகாந்த் கனிவுடன் கேட்டு எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து கூட்டணியை விட்டு விலகிவிட்டார்.
தேமுதிக அழைப்பே இருக்காது
பக்கத்தில் ஏதாவது விழா கொண்டாடினாலும் தேமுதிகவினருக்கு அழைப்பே இருக்காது. மரியாதையே இருக்காது. இத்தனை நாளாக எங்கள் கேப்டனுக்காக கூட்டணி தர்மத்திற்காக பொறுத்துக் கொண்டிருந்தோம். இனி அதிமுக ஆட்சியே அமைக்காது. சசிகலாவுக்கு துரோகம் செய்ததை போல் தேமுதிகவுக்கும் முதல்வரும் துணை முதல்வரும் துரோகம் செய்துவிட்டார்கள் என தேமுதிகவினர் ஆவேசமாக பேசினர்.