விஜயகாந்த் எனும் ஆளுமை ஆக்டிவ்வாக இல்லாமல் போனதால் திக்கு தெரியாத திசையில் தேமுதிக
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் எனும் ஆளுமை ஆக்டிவ்வாக இல்லாமல் இருப்பதாக் எந்த திசையில்தான் கட்சி போகிறது என்பது தெரியாமல் அந்த கட்சி தொண்டர்கள் திணறிவருகின்றனர்.
விஜயகாந்த் நல்ல ஆரோக்கியமான உடல்நிலையுடன் வலம் வந்த காலத்தில் சிங்கம் போல கர்ஜித்தார். விஜயகாந்த் எனும் ஒற்றை மனிதரை சுற்றியே தேமுதிகவின் அத்தனை நகர்வுகளும் இருந்தன.
தடுமாற்ற முடிவுகள்
ஒருகட்டத்தில் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ், தற்போது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர்தான் தேமுதிகவின் ஆக்டிவ் தலைமையாக இருக்கின்றனர். இந்த மூவரணியானது எந்த விஷயத்திலும் தெளிவான ஒரு முடிவை எடுக்க முடியாமல் தடுமாறித்தான் வருகிறது.
கண்மூடித்தனமான பேரம்
ஒவ்வொரு தேர்தலின் போதும் எப்படியான கூட்டணியில் இடம்பெறுவது என்கிற புரிதலே இல்லாமல் சீட்டுகள் ப்ளஸ் 1 ராஜ்யசபா சீட் என்கிற கண்மூடித்தனமான பேரத்தை எல்லா கூட்டணிகளுடன் பேசி கேலிப் பொருளாகிவிட்டது தேமுதிக. கடந்த லோக்சபா தேர்தலின் போது தேமுதிகவின் இந்த ஜோக்கர்தனமான கூட்டணி வியூகம் சந்தி சிரித்துவிட்டது.
அலைபாயும் தேமுதிக
இதேபாணியில்தான் இப்போதும் அங்கிட்டா? இங்கிட்டா? என தேமுதிக அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. இது கூட பரவாயில்லை. ஆனால் 40 சீட் தந்தால்தான் கூட்டணி என்றெல்லாம் அடம்பிடித்துக் கொண்டிருப்பது அந்த கட்சிக்கே ஓவராக தெரியவில்லையா? என்கிற எதிர்கேள்வியையே எழுப்பி நிற்கிறது. இன்னொரு பக்கம் தேமுதிகவின் ஒருகாலத்து 2-ம் கட்ட தலைவர்கள் பெரும்பாலானோர் அந்த கட்சியையைவிட்டு மாற்று கட்சிகளில் அடைக்கலமாகிவிட்டனர்.
விஜயகாந்தின் தேவை
ஒருவேளை விஜயகாந்த் ஆக்டிவ்வாக, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் தேமுதிக இப்படி திசைமாறி திக்கு தெரியாத வனாந்தரத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்காது. இதனைத்தான் தேமுதிகவின், விஜயகாந்தின் அபிமானிகள் ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் கேட்பவர்கள் காதில்தான் ஏனோ விழுவதும் இல்லை.. அவர்களுக்கும் இதை பற்றிய சிந்தனை கிஞ்சித்தும் இல்லை.