இது சூப்பர் டிவிஸ்ட்.. சரத்குமார் - விஜயகாந்த் - கமல்ஹாசன் - சீமான் கூட்டணியா? மறைமுக பேச்சு!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி ஒன்று உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி ஒன்று உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத சில கட்சிகள் இந்த தேர்தலில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் சில சிறிய கட்சிகள் விரைவில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதிலும் இன்னும் சில சிறிய கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் லோட்டஸ் மீண்டும் தொடங்கியதா? கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் திடீர் ராஜினாமா!
தேமுதிக கூட்டணி
இந்த நிலையில்தான் தமிழகத்தில் இன்னொரு முக்கிய கட்சியான தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்பது பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. தேமுதிக கட்சியானது, அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தேமுதிக கேட்ட இடங்களை கொடுக்க இரண்டு கட்சிகளும் மறுத்துவிட்டது. இதனால் இன்னும் தேமுதிக எந்த கூட்டணியும் சேரவில்லை.
கமல்ஹாசன்
அதேபோல் இன்னொரு முக்கிய கட்சியான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, எந்த கூட்டணியிலும் சேராது என்று தெளிவாக கூறியுள்ளது. திமுக, அதிமுக கூட்டணியில் சேர மாட்டோம். ஆனால் ஒத்த கருத்துள்ள வேறு சில கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் வைப்போம். இதுகுறித்து விரைவில் முடிவெடுப்போம். தேமுதிகவுடன் பேசுவது குறித்து பின் முடிவெடுப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.
சரத்குமார் சந்திப்பு
இந்த நிலையில்தான் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் நேற்று விஜயகாந்தை சென்று அவரது இல்லத்தில் சந்தித்தார். நேற்று சுமார் 1 மணி நேரம் இவர்கள் அரசியல் குறித்தும், விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும் பேசினார்கள். சந்திப்பை தொடர்ந்து சரத்குமார் ''எனது அரசியல் மற்றும் கூட்டணி நிலைப்பாட்டை விஜயகாந்திடம் கூறினேன். முடிவு எடுப்பது அவர் கையில் உள்ளது'' என்று பேட்டி அளித்து இருந்தார்.
சீமான் ஒருவர்
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்போது எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சிக்கு, கமல்ஹாசன் அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் அப்போது அதை சீமான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் சீமான் இந்த அழைப்பை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக்கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
மூன்றாவது கூட்டணி
இதனால் தற்போது தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தேமுதிக - சமத்துவ மக்கள் கட்சி - மக்கள் நீதி மய்யம் - நாம் தமிழர் ஆகிய கட்சிகள் சேர்ந்து மூன்றாவது கூட்டணி உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவார், யார் கூட்டணியை வழி நடத்துவார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.