நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்.. ஆளும் கட்சி தலையீடு, அதிகார துஷ்பிரயோகம்.. கொந்தளிக்கும் விஜயகாந்த்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் அறிவிப்பில் ஆளும் கட்சியின் தலையீடு இருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த அக். மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதே விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் இது காலதாமதமானது.
இந்தச் சூழலில் நகர்ப்புற தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேர்தல் அறிவிப்பில் ஆளும் கட்சியின் தலையீடு இருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
உடனடி அறிவிப்பு ஏன்
இடையில் ஒருநாள் மட்டுமே கால அவகாசம் வழங்கி, ஜனவரி 2ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? மாநில தேர்தல் அதிகாரிகளால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், எவ்வித கால அவகாசமும் வழங்காமல், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டது ஏன்?
ஆளும் கட்சியின் தலையீடு
இதிலிருந்து ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் எனத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்பிலேயே இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறதென்றால்! தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் !? என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.
போதிய அவகாசம்
இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கிய கால அவகாசத்தைப் போல் இந்த தேர்தலிலும், வழங்கினால்தான், அனைத்து வேட்பாளர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.