கலெக்டரை மாத்துங்க.. பணப் பட்டுவாடா ஜரூர்.. அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக தேமுதிக புகார்!
திமுகவினர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேமுதிக புகார் அளித்துள்ளது.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் தேமுதிக புகார் அளித்துள்ளது. ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திரண்டு, எல்லா இடங்களிலும் எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என தேமுதிக குற்றம்சாட்டியுள்ளது.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவனீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக ஈபிஎஸ் அணி சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகனும் போட்டியிடுகின்றனர். இதில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டார்.
எனினும், இரட்டை இலை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து நிலவும் குழப்பமான சூழலால் ஓபிஎஸ் தரப்பு தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டேனா.. மறுக்கும் தேமுதிக சுதீஷ்!
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக ஈபிஎஸ் அணி சார்பில் கே.எஸ்.தென்னரசு, அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பாஜக புகார்
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கி தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் கேபி ராமலிங்கம், நாராயணன் திருப்பதி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய முயல்வதாகப் புகார் அளித்தனர்.
தேமுதிக புகார்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம் தேமுதிகவினர் புகார் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜனார்த்தனன், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா செய்து வருவது குறித்து மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம். ஒட்டுமொத்த அமைச்சர்களும் அந்த தொகுதியில் திரண்டு, எல்லா இடங்களிலும் எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்." எனக் குற்றம்சாட்டினார்.
பணப் பட்டுவாடா ஆடியோ
மேலும், "நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரங்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். அமைச்சர்கள் கார்களில் கொடி காட்டியவாறு தொகுதியில் வலம் வருகின்றனர். பணப் பட்டுவாடா தொடர்பான ஆடியோவையும் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். அங்கு இருக்கும் அனைத்து அதிகாரிகளையும், ஈரோடு மாவட்ட ஆட்சியரையும் மாற்ற வேண்டும்." எனத் தெரிவித்தார்.