நவ.7-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... தேமுதிக அறிவிப்பு
சென்னை: நாளை மறுதினம் (நவ.7) வியாழக்கிழமையன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜெயிலிலும், பெயிலிலும் காலத்தை கழிக்கும் கரையான்கள்... நமது அம்மா விமர்சனம்
நவ.7-ல் கூட்டம்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தவறாது அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைமைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை மறுதினம் கூட்டம் நடைபெறும் என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இது அவசரக் கூட்டம் என கருதப்படுகிறது.
ஆலோசனை
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பதால் அது பற்றி நிர்வாகிகளுடன் இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி தொடர்பாகவும் விரிவாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இடைத்தேர்தல் வெற்றி
மக்களவை தேர்தலுக்கு பின்னர் தேமுதிகவினர் சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி சற்று உற்சாகத்தை கொடுத்துள்ளது. கூட்டணிக் கட்சியான அதிமுகவின் வெற்றியை தங்களின் வெற்றியாக கொண்டாடினர் தேமுதிகவினர்.
போட்டியிடும் இடங்கள்
உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் தேமுதிகவிற்கு சாதகம் என்பது பற்றி மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலை நாளை மறுதினம் நடைபெறும் கூட்டத்தில் அவர்கள் பிரேமலதா விஜயகாந்திடம் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.