வெறும் 2%.. என்னா ஆட்டம் காட்டுது தேமுதிக.. அப்படி என்னதான் வேணுமாம்.. கிடுகிடுக்கும் தேர்தல் களம்!
சட்டசபை தேர்தலுக்காக இப்போதே 2 சீட்டுகளுக்கு தேமுதிக அடிபோடுவதாக சொல்லப்படுகிறது.
Recommended Video
சென்னை: அப்படி என்னதான் தேமுதிகவுக்கு கிராக்கி இருக்கிறதோ தெரியவில்லை.. வெறும் 2 சதவீத வாக்கு வங்கியை வைத்து கொண்டே அதிமுக கூட்டணியில் இணைய இந்த இழு இழுத்து வருகிறது.
அதிமுக ஒரு தப்பு பண்ணிடுச்சு.. முதல் வேலையாக விஜயகாந்த் ஊருக்கு வந்ததும் கூப்பிட்டு "இவ்வளவுதான் சீட்டு, இந்தா பிடி" என்று சொல்லி இருந்தால் இவ்வளவு இழுபறி நீடித்து வராது. ஆனால் பாமகவுக்கு ஒதுக்கிவிட்டு தேமுதிகவுக்கு தரவும்தான் பிரச்சனையே!
பாமகவுடன் போட்டி போட்டுக் கொண்டு அதேபோல எங்களுக்கும் 7+1 வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தது. இதில் சுதீஷை உசுப்பி விட்டது யார் என்று தெரியவில்லை.. பாமகவை விட ஒன்று அதிகம் வேண்டும் என்று கேட்கிறாராம்.
இதுதான் கன்டிஷன்.. ஆர்டர் போட்ட ஸ்டாலின்.. கூட்டணிக்கு அதிக இடங்களை திமுக விட்டுத் தந்தது ஏன்?
பாமக முயற்சிகள்
பாமக கட்சியை வளர்க்க பட்ட பாடுகள் எல்லாம் என்ன என்று தெரிந்தும், அன்புமணியும், ராமதாசும் கட்சியை பலப்படுத்த நாளுக்கு நாள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன என்று தெரிந்தும், சுதீஷ் இப்படி சீட்டுகளை அதிகப்படுத்தி கேட்பது நியாயமா என்பதை அவரது மனசாட்சிக்கே விட்டுவிடலாம்.
ஆம்பூர், குடியாத்தம்
கடைசியாக 5 சீட் தர அதிமுக ஒப்புக் கொண்டதே பெரிய விஷயமாக பார்க்கப்படும்போது., இப்போது தேமுதிக திடீரென்று ஒரு கண்டிஷனை போட்டுள்ளதாம். அதாவது சட்டசபை தேர்தலுக்கு இப்போதே துண்டு போட்டு விரிக்க தயாராகி விட்டதாம். குறிப்பாக ஆம்பூர், குடியாத்தம், ஓசூர், சோளிங்கர் இந்த 4 இடங்களில் ஏதாவது 2 இடங்களை தர வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்த துவங்கி விட்டதாம். இந்த இடங்களில் எல்லாம் ஏற்கனவே தேமுதிக போட்டியிட்ட செல்வாக்குள்ள இடங்கள்தான்.
பிரேமலதா, சுதீஷ்
இதன் கணக்கு என்னவென்றால், 5 என்பது பாமகவுக்கு கீழ் உள்ள இடங்கள் ஆகிறது, மேற்படி இடங்களில் 2 வாங்கிவிட்டால், பாமக வாங்கிய கணக்கு தேமுதிகவுக்கு சரியாகிவிடும். இதுதான் விஷயமே. தேமுதிக இளைஞர் அணி பொறுப்பு வகிக்கும்போதிருந்தே டெல்லி மீது ஒரு கண் வைத்தவர் சுதீஷ். அதற்கேற்ற மாதிரி பியூஷ்கோயல், உள்ளிட்டவர்கள் மீது நல்ல தொடர்பையும் சுதீஷ், பிரேமலதா வைத்திருக்கிறார்கள். இதுபோக அமித்ஷாவுக்கு தேமுதிக மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இதை பயன்படுத்திதான் இந்த கண்டிஷனை போட்டுள்ளனர். அவசர ஆலோசனை, அவசர ஆலோசனை என்று 4 நாட்களாக தேமுதிக கூட்டம் நடத்தி கொண்டிருக்கிறது. அது என்னதான் பேசுவார்களோ, இத்தனை முறையா ஒரு கட்சியில் ஆலோசனை கூட்டம் நடக்கும் என்றெல்லாம் கமெண்ட்கள் எழ ஆரம்பித்துவிட்டன.
குறிக்கோள்
ஆனால் யார் என்ன சொன்னாலும் சரி, கட்சி எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, வாக்கு வங்கி என்ற ஒன்று கட்சிக்கே இல்லாவிட்டாலும் சரி, பாமகவுக்கு இணையாக சீட் வாங்குவதுதான் தேமுதிகவின் ஒரே குறிக்கோளாக உள்ளது. ஏற்கனவே பாஜக தலைமை சொன்னதால்தான் 3-ல் இருந்து 5 தர அதிமுக சம்மதம் சொன்னது. இப்போது, நேரம் பார்த்து தேமுதிக செக் வைத்து கழுத்து அறுப்பதால் என்ன செய்வதென்றே புரியாமல் அதிமுக விழித்து கொண்டிருக்கிறதாம்.
அஸ்திவாரம்
ஆனாலும் இந்த அரசியல் கட்சிகள் தேமுதிகவை ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களின் அஸ்திவாரம் அந்த அளவுக்கு பலமானது இல்லை என்பதால் வந்தவரை லாபம்தானே என்ற அரசியல் கணக்குதான்.. அது சரி அது சரி!