அவங்க மட்டும்தானா... நாங்களும்தான் கெத்து.. எங்களுக்கும் 7+1 வேணும்.. தேமுதிக பிடிவாதம்
Recommended Video
சென்னை: பாமகவுக்கு கொடுத்தது போலவே தங்களுக்கும் 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
நேற்று மாசி மகம் நாளன்று தனது கூட்டணி சம்பந்தமான அறிவிப்பினை அதிமுக வெளியிட்டது. தனது கூட்டணியில் உள்ள பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதேபோல தன் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கும் 3 சீட் கொடுத்து தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்ய அதிமுக முடிவு செய்தது.
3 தொகுதிகள்
இந்நிலையில், பாஜக உடனான தொகுதி பங்கீடு முடிந்தபிறகு, பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். ஆனால் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதை விஜயகாந்த் ஏற்கவில்லை என தெரிகிறது.
எதிர்கட்சி தலைவர்
பாமகவுக்கு வட மாவட்டங்களில் மட்டும்தான் செல்வாக்கு இருக்கு, ஆனால் தேமுதிகவுக்கு தமிழ்நாடு பூராவும் செல்வாக்கு இருக்கு. அதுமட்டும் இல்லை, நாங்கள் அன்றைய எதிர்க்கட்சியாக செயல்பட்டவர்கள். அதனால் பாமகவுக்கு தந்ததை போலவே எங்களுக்கும் 7 சீட், கூடவே ஒரு ராஜ்ய சபா சீட்டும் சேர்த்து தர வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கண்டிஷன் போட்டதாக சொல்லப்படுகிறது.
இழுபறி நீடிப்பு
ஆனால் இது எப்போது பேசி முடிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என தெரியவில்லை. எப்படியும் 3-வது அணி என்று ஒன்று இப்போதைக்கு இல்லை, திமுக பக்கமும் போக முடியாது, அதனால் அதிமுகவை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் தேமுதிக விஷயத்தை இப்போதைக்கு ஆறப்போட்டுள்ளதாகவும், இழுபறி நிலை இன்னும் நீடித்தே இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
குழப்பம் வருமோ?
ஒரு வேளை தேமுதிகவுக்கும் தங்களுக்கு இணையாக சீட் கொடுக்கப்பட்டால் அதை நிச்சயம் பாமக ரசிக்காது, ஏற்காது, கூட்டணியை விட்டு வெளியேறலாம் அல்லது கூடுதல் சீட் கேட்டு பிரச்சினையைக் கிளப்பலாம் என்றும் தெரிகிறது. மொத்ததில் அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவால் பெரும் குழப்பம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.