அதிமுகவிடம் ராஜ்யசபா சீட்டுக்கு ஏற்கனவே துண்டு போட்டு வெச்சிருக்கோம்.. வெயிட்டிங்... பிரேமலதா
சென்னை: தங்களுக்கு ராஜ்யசபா சீட்டை அதிமுக ஒதுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க இருக்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26-ல் நடைபெற உள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.தமிழக சட்டசபையில் தற்போதைய பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு தலா 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் உறுதியாக கிடைக்கும்.
இதனையடுத்து திமுக, அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி. பதவியை பெற பலரும் முட்டி முயன்று வருகின்றனர். திமுகவில் என்.ஆர். இளங்கோவன், ஜின்னா, ஈரோடு முத்துசாமி, அரியலூர் சிவசங்கர், அப்துல்லா என பலரது பெயர்களும் அடிபடுகின்றன.
அதிமுகவில் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தம்பிதுரை, அரவிந்த் பாண்டியன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் வாய்ப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக தரப்பு தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தரும் என்று தேமுதிக எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
இது குறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போதே ஒரு ராஜ்யசபா சீட் கேட்கப்பட்டிருந்தது. இதனால் தற்போது எங்களுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது தொடர்பாக கூட்டணி அமைத்த போதே பேசியும் இருக்கிறோம் என்றார்.