வெண்ணெய் திரண்டு வந்த போது பானையை உடைத்த எல்.கே.சுதீஷ்... தேமுதிக நிர்வாகிகள் மனநிலை என்ன..?
சென்னை: வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்த கதையாக கூட்டணி மேகம் கூடி வந்த சூழலில் அதனை கலைத்திருக்கிறார் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் எல்.கே.சுதீஷின் முகநூல் பக்கத்தில் இடம்பெற்று பின்னர் நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கார்டூன் பற்றித்தான் அரசியல் தலைவர்களிடையே விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-தேமுதிக கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான வாய்ப்பு தற்போதைய நிலவரப்படி குறைவாகவே தெரிகிறது.
தமிழகம் தாழ்ந்த நிலைக்கு செல்கிறது... கற்பனை அறிவிப்புகளை முதல்வர் நிறுத்த வேண்டும் -கே.எஸ்.அழகிரி
முகநூல் பக்கம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிற்பது போலவும் அவரது காலடியில் விழுந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை கூட்டணிக்கு வருமாறு அழைப்பது போலவும் கார்ட்டூன் ஒன்றை முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ். அந்த கார்டூன் விவகாரம் அடுத்த சில நிமிடங்களில் செய்தி தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் செய்தியாக இடம்பெற்று திமுகவை புறந்தள்ளும் தேமுதிக என்ற கோணத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கார்டூன் நீக்கம்
கார்டூன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அந்தப் பதிவை உடனடியாக தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கிய சுதீஷ், நாளிதழ் ஒன்றின் பெயரை சுட்டிக்காட்டி அதற்கு பதில் கொடுக்கும் வகையில் பதிவிட்டதாகவும் மேலும் அந்த கார்டூனை தாம் வடிவமைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்தார். ஆனால் அதற்குள் கார்டூன் விவகாரம் திமுக முன்னணி நிர்வாகிகள் கவனத்திற்கு சென்றதை அடுத்து அவர்கள் இதனை தன்மானப் பிரச்சனையாக கருதினர். மேலும், கருணாநிதி மறைந்தவர் என்பதை அறிந்தும் அரசியல் நாகரீகமின்றி நடந்துகொண்டுள்ளதாக சுதீஷ் மீது பாய்ந்தனர்.
அவசரம்
இதனிடையே இந்த விவகாரத்தில் தனது தம்பி சுதீஷை அழைத்துபேசிய பிரேமலதா அவசரம் காட்டவேண்டாம் எனவும் வேகத்தை விட விவேகம் முக்கியம் எனவும் அறிவுரை வழங்கியிருக்கிறார். இதனிடையே தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரிடம் இது குறித்து பேசிய போது அவர் நம்மிடம் கூறியதாவது, ''தேர்தல் பணிகளில் அண்ணி முழு கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த கார்டூன் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு எங்கள் கட்சி மீதான இமேஜயும் பாதித்துள்ளது.''
அரசியல் தலைவர்கள்
''அந்த கார்டூனை நானும் பார்த்தேன், பிரச்சனைக்கு காரணமே அது பிறரின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் வகையில் இருந்தது தான் . ஆனால் அதை சுதிஷோ, கட்சியோ வடிவமைக்கவில்லை என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை. கேப்டனை ஏலம் விடுவதாக நாளிதழ் ஒன்று கார்டூன் வெளியிட்டதற்கு பதில் சொல்லும் வகையில் பதிவிடப் போய் அது வில்லங்கமாகிவிட்டது''. எனக் கூறினார்.