இன்னும் பிடிவாதம் போகலை.. சுதீஷுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வேணும்.. அதிமுகவை நெருக்கும் தேமுதிக
Recommended Video
சென்னை: வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு இடம் வேண்டும் என அக்கட்சியின் தலைமை விரும்புகிறது.
தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைவதால் இப்போதே புதிய உறுப்பினர்கள் தேர்வு தொடர்பாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த முறை பாமகவுக்கு ஒரு சீட் வழங்கியது போல், இந்த முறை தங்களுக்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும் என அதிமுகவை தேமுதிக நெருக்கி வருகிறது.
நான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி
6 இடங்கள்
தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. அதிமுகவில் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், மேட்டுப்பாளையம் செல்வராஜ், சசிகலா புஷ்பா, ஆகியோரின் பதவிக்காலங்கள் முடிகின்றன. இதேபோல், திமுகவில் திருச்சி சிவாவின் பதவிக்காலமும், மார்க்சிஸ்ட் கட்சியில் டிகே ரங்கராஜன் பதவிக்காலமும் முடிவடைகிறது.
சட்டமன்ற பலம்
திமுகவுக்கு இப்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் இந்த முறை மூன்று ராஜ்யசபா உறுப்பினர்கள் வரை தேர்வு செய்யப்படலாம். அதேபோல் அதிமுகவிலும் மூன்று ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட முடியும். சட்டமன்ற பலத்தை வைத்து பார்க்கும் போது இரு கட்சிகளும் சரிபாதியாக உள்ளன.
ஒரு ராஜ்யசபா சீட்
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக இந்த முறை தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை பெற தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுக்கு ஒரு சீட் கொடுத்தது போல், இப்போது எங்களுக்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும் என அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்று எல்.கே.சுதீஷை எம்.பி.யாக்க வேண்டும் என நினைக்கிறாராம் பிரேமலதா.
சட்டமன்றத் தேர்தல்
ஆட்சியை தக்கவைக்க காரணமாக இருந்த இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தேமுதிகவின் பங்கு இன்றியமையாதது என்றும், இனி வரும் நகர்ப்புற உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து நல்ல முடிவாக எடுக்குமாறு தேமுதிக அதிமுகவிடம் தூது விட்டுள்ளது.