கோயல் வந்தது ஏன்... கூட்டணி பேச வரவில்லை என தேமுதிக விளக்கம்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
சென்னை: தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் கூட்டணி பேச வரவில்லை என தேமுதிக விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 21 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அனைத்துக் கட்சிகளும் பேச்சவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியன இருப்பது உறுதியாகிவிட்டது.
பாமகவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகளும், பாஜகவுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக கூட்டணியை தமிழக பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இதையடுத்து தேமுதிகவை அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரும் பொறுப்பு பாஜகவுக்கு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு பியூஷ் கோயல், தமிழிசை சவுந்திரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், முரளிதர ராவ் உள்ளிட்டோர் சென்றனர்.
இந்த சந்திப்பு குறித்து தேமுதிக விளக்கம் அளித்துள்ளது. அதில் கூட்டணி குறித்து பேசுவதற்காக கோயல் இங்கு வரவில்லை. மரியாதை நிமித்தமாகவும் உடல் நிலை குறித்து விசாரிக்க மட்டுமே வந்தனர் என தேமுதிக விளக்கம் அளித்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேமுதிக விளக்கம் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.