41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக!
சென்னை: 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை போல் 41 இடங்கள் வேண்டும் என கேட்டிருந்த தேமுதிக சற்று இறங்கி வந்து 25 தொகுதிகளை கேட்டு வருகிறதாம். அதாவது பாமகவை விட இரு தொகுதிகள் அதிகம் கேட்டு அடம்பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை அழைத்து அதிமுகவும் திமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யும் முயற்சியில் உள்ளன.
அந்த வகையில் திமுகவின் தொகுதி பங்கீடுகள் முடிவடைய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது. அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பேச்சுவார்த்தை
ஆளும் கட்சியான அதிமுக நேற்றைய தினம் பாமகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை லீலா பேலஸில் நடத்தி முடித்தது. பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக அறிவித்தது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்ததால் தொகுதி எண்ணிக்கை குறைத்து பெற்றுள்ளதாக பாமக தெரிவித்துள்ளது.
அதிமுக அமைச்சர்கள்
இதற்கடுத்து இன்றைய தினம் பாஜக- அதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் எத்தனை தொகுதிகள் என்பது தெரியவில்லை. 20 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கப் பெறலாம் என தெரிகிறது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்று இரவு அதிமுக அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சட்டசபை தேர்தல்
இதில் தேமுதிக 25 இடங்களை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இத்தனை நாட்களாக பிரேமலதா பேசும் போதெல்லாம் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை போல் 41 தொகுதிகளை கேட்கவுள்ளோம் என கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது 25 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெருமிதம்
தேமுதிகவின் நோக்கம் தாங்கள் எந்த கட்சியை காட்டிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்பதுதான். 2006இல் தேமுதிகவுடன் கூட்டணி வைக்காமலேயே அதிமுக வென்றது என்பதை மறந்து, 2011ஆம் ஆண்டு தேமுதிக இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதை அவ்வப்போது கூறி பெருமிதம் கொள்கிறது.
இரு தொகுதிகள்
தற்போது கூட்டணிக்குள்ளேயே போட்டி நிலவுகிறது. கட்சிகளின் செல்வாக்கிற்கேற்ப கூட்டணி கட்சியின் தலைமை அழைத்து பேசும். இதுதான் வாடிக்கை. அது போல் தொகுதி பங்கீடு அப்படித்தான். நேற்றைய தினம் தங்களை அழைக்காமல் பாமகவை அழைத்ததால் தேமுதிக அதிருப்தியில் இருக்கிறது. எனவே கவுரத்தை காப்பாற்றிக் கொள்ள அந்த கட்சிக்கு கொடுக்கப்பட்ட இடங்களைவிட இரு தொகுதிகள் மட்டுமே அதிகம் கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன.