திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்!
சென்னை: திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகும் வரை தேமுதிக- அதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருக்கும் என கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தேர்தலுக்கு இன்னும் 29 நாட்களே உள்ளது. இதனால் கூட்டணி, பிரச்சாரம், தொகுதி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு என அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதில் முடிவுக்கு வராத விஷயம் தொகுதி பங்கீடு உடன்படிக்கை.
கூட்டணிக்கு அஸ்திவாரமே தொகுதி பங்கீடு உடன்படிக்கைதான். இதிலேயே கட்சிகளுக்குள் இழுபறி நீடித்து வருகிறது. இப்படியே இழுபறி நீடித்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் எப்படி பிரச்சாரம் செய்வது என்ற கவலை இப்போதே தொண்டர்களை தொற்றி கொண்டது.
20 முதல் 24 தொகுதிகள் மட்டும்தான்
ஆம். திமுக கூட்டணியில் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. இந்த முறை தங்களுக்கு 30 தொகுதிகள் வேண்டும் என கேட்கிறது காங்கிரஸ். ஆனால் திமுகவோ அவ்வளவு எல்லாம் தர முடியாது, 20 முதல் 24 தொகுதிகள் வரை தருகிறோம் , அதற்கு மேல் கிடையாது என கறார் காட்டுகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம்
அதே போல் 30 க்கு கீழ் ஒரு சீட்டு கூட குறைந்து பெறக் கூடாது என்பதில் ராகுல் காந்தி பிடிவாதமாக தமிழக காங்கிரஸிடமும் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடமும் சொல்லிவிட்டாராம். இதனால் இந்க கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணையலாமா என்ற யோசனையில் இருந்து வருகிறதாம்.
23 அல்லது 25 தொகுதிகள்
ஒரு வேளை கேட்டது கிடைக்காவிட்டால் அடுத்து இதை தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினர். இது இவ்வாறிருக்க அதிமுக கூட்டணியிலும் இதே போன்ற ஒரு இழுபறி தேமுதிகவுடன் உள்ளது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அது போல் தங்களுக்கு பாமகவைவிட இரு தொகுதிகள் அதிகமாக அதாவது 25 தொகுதிகளோ அல்லது பாமகவுக்கு இணையாக 23 தொகுதிகளோ ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாம்.
ராஜ்யசபா சீட்
கடந்த செவ்வாய்க்கிழமை லீலா பேலஸில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த சுதீஷ், பிரேமலதா வராத நிலையில் தேமுதிக நிர்வாகிகள் சென்றனர். அப்போது 21 தொகுதிகளுடன் ராஜ்யசபா சீட் ஒன்றையும் ஒதுக்கிக் கொடுத்தால் கூட்டணி உறுதி என பேசியதாம். ராஜ்யசபா சீட்டுக்கு கொடுக்க ரெடி என்றும் 21 தொகுதிகள் என்பது மிகவும் அதிகம், 11 -14 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் என்றால் உடனே உடன்படிக்கை செய்து கொள்ளலாம் என்றதாம் அதிமுக.
பாமகவில் 23 தொகுதிகள்
ஆனால் இதற்கு இன்னும் முடிவை தேமுதிக சொல்லவில்லை. பாமகவில் 23 தொகுதிகளையும் ஒதுக்கி கடந்த நாடாளுமன்றத் தேர்தல் உடன்படிக்கையில் பாமகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுக்கப்பட்டது. அது போல் எங்களுக்கு 21 தொகுதிகள் கொடுத்தால் என்ன என வினவுகிறது தேமுதிக. திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளால் காங்கிரஸ் வெளியேறும் வரை தேமுதிக எந்த முடிவையும் சொல்லாது என்கிறார்கள்.
20 முதல் 25 தொகுதிகள்
ஒரு வேளை காங்கிரஸ் விலகிவிட்டால் தேமுதிக, திமுக கூட்டணிக்கு செல்லும். அங்கு காங்கிரஸுக்கு தருவதாக ஒப்புக் கொண்ட 20 முதல் 25 தொகுதிகளை தேமுதிகவுக்கு அளிக்கும் என தெரிகிறது. எந்த கூட்டணியில் இருந்தால் என்ன பாமகவை விட அதிகம் தொகுதிகள் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது தேமுதிக. இதனால் டெல்லியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தினேஷ் குண்டுராவ் தமிழகம் வந்தால்தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விலகுமா, தேமுதிக திமுக கூட்டணியில் இணையுமா என்பது தெரியவரும்.