பெண்களுக்கு அநீதி.. கொதிக்கும் தமிழகம்.. எதிர்பார்க்கும் பொள்ளாச்சி.. 'வீர மங்கை' பிரேமலதா எங்கே?
சென்னை: தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில், ஒருவழியாக பட்டும் படாமல் தனது கருத்தை இன்று, பதிவு செய்துள்ளார் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
ஜெயலலிதாவுக்கு மாற்றாக தான், தான் தமிழகத்தின் பிரபலமான பெண் தலைவர் என்று தன்னைத் தானே முன்னிறுத்திய பிரேமலதா, இன்று பெண்கள் குலத்திற்கு எதிராக நடைபெற்றுள்ள ஒரு மாபெரும் அக்கிரமத்திற்கு எதிராக, மவுனியாக இருப்பதை வரலாறு பதிவு செய்துவிட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, மக்கள் நல கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்தது. அப்போது உடல் நலக் குறைவு காரணமாக விஜயகாந்தால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட முடியவில்லை.
கோபேக் மோடி... நாங்களும் போடுவோம் கோபேக் ராகுல்.. படு சூடான டிவிட்டர்.. ஆனால் ஃபோர்ஸ் பத்தலையே!
ஜெயலலிதாவிற்கு மாற்றாம்
அந்த காலகட்டங்களில் 234 தொகுதிகளிலும் சூறாவளியாக சுற்றுப் பயணம் செய்தவர் பிரேமலதா. ஜெயலலிதாவை நேரடியாக கடுமையாக தாக்கி பேசினார். பொதுக்கூட்டங்களில், திமுகவை விடவும் மிகவும் ஆவேசமாக ஜெயலலிதாவை தாக்கி தனது உரைகளில் குறிப்பிடுவதற்கு பிரேமலதா மறக்கவில்லை. இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு மாற்றாக தமிழகத்தின் பிரபலமான பெண் தலைவராக தன்னை உருவகப் படுத்திக் கொள்வதற்கு அவர் மிகவும் மெனக்கெட்டு முயற்சிகளை செய்தார். ஆனால் நடந்ததோ வேறு. எந்த ஒரு இடத்திலும் தேமுதிக வெற்றி பெறவில்லை. பிரேமலதாவின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை. அவரது பிரச்சாரத்தை மக்கள் ரசிக்கவில்லை என்பதை, அந்த கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட, மளமள சரிவு காண்பித்து கொடுத்துவிட்டது.
கொள்கை கேள்வி
இதன் பிறகு, தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கிய நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுடனும், தேமுதிக கூட்டணி பேரம் நடத்திக் கொண்டிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் ஆத்திரமடைந்த பிரேமலதா ஆவேசமாக பிரஸ்மீட் ஒன்றை நடத்தினார். அதில், தேமுதிகவின் கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய ஒரே 'குற்றத்திற்காக' நிருபர்களை ஒருமையில் பேசி பொங்கி எழுந்தார் பிரேமலதா.
வீரமங்கை எங்கே
இப்படி தேர்தல்கால பிரச்சாரத்திலும், பிரஸ்மீட்டில் கோபக்கனலை காட்டி சிலருக்கு வீரமங்கை போன்று தோற்றம் அளித்தவர்தான், பிரேமலதா. ஆனால், கொடுமை என்னவென்றால், பொள்ளாச்சியில் இவ்வளவு பெரிய பாலியல் பலாத்கார சம்பவம் நடந்து, வெளி உலகத்துக்கு அம்பலமாகி விட்ட நிலையில், பிரஸ்மீட்டில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் காண்பித்த கோபத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட பொள்ளாச்சி விவகாரத்தில் பிரேமலதா வெளிப்படுத்தவே இல்லை என்பது, வரலாற்றுச் சோகம்.
இரும்பு பெண்மணி
தனிப்பட்ட முறையில் இன்றி, அரசியல் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களையே, ஒருமையில் பேசி, 'இரும்புப் பெண்மணி', 'மாதர் குல மாணிக்கம்', 'கோபக்கனல்', 'அக்கினிக் குஞ்சு' என்றெல்லாம் தேமுதிகவின் சில தொண்டர்களால் புகழப்பெற்ற பிரேமலதா, பாலியல் பலாத்கார வழக்கில் பொங்கியெழுந்து களத்திற்கு வந்து பொள்ளாச்சியை புரட்டிப் போட்டு இருக்க வேண்டாமா? என்று கேட்கிறார்கள் அதே கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள். ஆனால் நடந்தது என்ன?
சீட் மட்டும் போதுமா
சென்னையில் இன்று நிருபர்கள் கேள்வி கேட்டதினால், "பொள்ளாச்சி விவகாரத்தை உரிய வகையில் விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்" என்று போனால் போகிறது என்று ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் பிரேமலதா. ஒரு பக்கம் மாதர் சங்கங்கள் போராட்டம், மற்றொரு பக்கம் கல்லூரி மாணவ, மாணவிகள் கூட களம் இறங்கி போராட்டம், இன்னொரு பக்கம் கனிமொழி தலைமையில் திமுக போராட்டம், இப்படி பொள்ளாச்சி நகரமே போர்க்களம் ஆகியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில், நான்கு சீட்டுகளை, அந்தர் பல்டி அடித்து பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் பூரிப்போடு இருக்கும் பிரேமலதா, பெண்களுக்காக போராட வருவார் என்று எதிர்பார்ப்பது மக்களின் அறியாமை தானே?