மீண்டும் அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்.. பழைய கம்பீரத்துடன் திரும்புவாரா.. தொண்டர்கள் ஆர்வம்
Recommended Video
சென்னை: ஒரு காலத்தில் கணீர் குரலோடு கம்பீரமாக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இப்போது சரிவர பேச முடியாத அளவுக்கு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் சிகிச்சை அளித்து, அழைத்துவந்தனர். ஆனாலும் அவரது உடல்நலத்தில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் விஜயகாந்துக்கு மீண்டும் மேல்சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர்.
விஜயகாந்த் என்றாலே மிரட்டலான பார்வை, கணீர் குரல், வசீகர தோற்றம் என்பதே அனைவரின் கண் முன்னே வந்து போகும். அப்படி கம்பீரமாக இருந்த போது தனது கட்சியை அவர் மிகப்பெரிய அளவில் வளர்த்தார். அவருடன் கூட்டணி வைக்க திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டன. விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைக்கிறாரோ அவரே முதல்வர் என்ற அளவில் இருந்தது ஒரு காலம்.
கால ஓட்டம் யாருக்கும் பெரிய மாற்றத்தை உண்டாக்கும என்பதற்கு விஜயகாந்த் மட்டும் விதிவிலக்காக அமையவில்லை. தவறான கூட்டணி, தவறான வழிநடத்தல்களால் விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி தடம் தெரியாத அளவுக்கு ஒருபக்கம் அழிந்து வருகிறது. ஆனால் முன்பு போல் கட்சியை காப்பாற்றும் நிலையில் விஜயகாந்த் இல்லை என்பதே வேதனைக்கு உரிய உண்மை.
விஜயகாந்துக்கு சிகிச்சை
காரணம் என்னெவென்றால் விஜயகாந்தின் உடல்நிலை. அவர் கடந்த 2016ம் ஆண்டு வரை நல்ல உடல்நலத்துடன் இருந்தார். அதன்பிறகு விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு விஜயகாந்த் அமெரிக்கா அழைத்துச்செல்லப்பட்டார்.அங்கு அவரது குடும்பத்தினர் சிகிச்சை அளித்தனர். அவரது அருகிலேயே இருந்த விஜயகாந்தின் குடும்பத்தினர் பூரண குணமாகும் வரை அங்கேயே இருந்தனர்.
அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள்
இதனால் தேர்தலுக்கு முன்பு விஜயகாந்த் ஓரளவு நல்ல உடல்நலத்துடன் சென்னை திரும்பினார்.இதனால் உற்சாகமாக இருந்த தேமுதிகவினர், அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது நடந்த சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவரால் சுத்தமாக பேசமுடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு பேசினார். திமுகவுக்கு ஓட்டு போட்டுடாதீங்க என்று விஜயகாந்த் பேசிய போத அவரது கணீர் குரல் மாயமாகி தழுதழுத்து காணப்பட்டது. இதை கேட்க முடியாமல் அன்றே தொண்டர்கள் உணர்ச்சிவயப்பட்டவர்களாக இருந்தனர்.
விஜயகாந்த் பங்கேற்றார்
இதனால் தேமுதிகவுக்காக விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அவரது பிரேமலதாவும்,அவரது மைத்துனர் சுதீஷ் ஆகியோர் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.ஆனால் தேமுதிக லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதுஒருபக்கம் என்றால், விஜயகாந்த் அதன்பிறகு எந்த ஒரு பெரிய பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. எனினும் கடந்த ஜுன் 2ம் தேதி தேமுதிக சார்பில நடந்த இப்தார் விருந்தில் மட்டும் பங்கேற்றார். அப்போதும் சோர்வாகவே காணப்பட்டார்.
வேண்டும் தொண்டர்கள்
இதையடுத்து தற்போது விஜயகாந்துக்கு மேல் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விஜயகாந்தின் உடல்நிலை கொஞ்சம் தேறிய உடன் அவர் விரைவில் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இந்த முறையாக பூரணமாக விஜயகாந்த் குணமாகி நல்ல உடல்நலத்துடன் மக்களிடம் மீண்டும் பேச வேண்டும் என அவரது தொண்டர்கள் வேண்டி வருகிறார்கள்.