சிகிச்சைக்காக அப்பா அமெரிக்காவுக்கு செல்கிறார்.. விஜய பிரபாகரன் தகவல்
சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக அவருடைய மூத்த மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியலில் அவரது ஈடுபாடு குறைந்துள்ளது.
அவரது குரலும் வெகுவாகவே பாதிக்கப்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்று சிகிச்சையும் எடுத்து வருகிறார்.
வீட்டில் ஓய்வு
கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சைக்காக குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், பின்னர் அமெரிக்காவும் சென்றார். அங்கு ஒரு மாதம் சிகிச்சை முடிந்து, கருணாநிதி மரணத்துக்கு பின்னர்தான் நாடு திரும்பினார். அப்போதிலிருந்து முக்கியமான கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு விட்டு, வீட்டில் ஓய்வாக உள்ளார் விஜயகாந்த்.
அமெரிக்கா பயணம்
இந்நிலையில், இதுகுறித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த தகவலை உறுதிபடுத்தி உள்ளார். விஜயபிரபாகரன் கூறும்போது, "அப்பாவுக்கு மீண்டும் அமெரிக்காவில் சிகிச்சையளிக்கப்பட உள்ளது.
மீண்டும் அமெரிக்கா
விஜயகாந்த் உடல்நிலை காரணமாக, திருப்பூரில் நடக்க இருந்த மாநில மாநாடு கூட வரும் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல இருப்பதாக சமீபகாலமாகவே சொல்லப்பட்டு வந்தது.
தீவிர பிரச்சாரம்
இதற்காக விரைவில் நாங்கள் அமெரிக்கா செல்ல உள்ளோம். வருகிற டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அமெரிக்கா செல்ல வேண்டி வரும். சிகிச்சை முடிந்ததும் மீண்டும் அதே பழைய கம்பீரத்துடன் திரும்பி வருவார். தேர்தல் பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபடுவார்'" என்றார்.