எப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..?
சென்னை: தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக ஓரளவு செல்வாக்கு மிகுந்த கட்சியாக ஒரு காலத்தில் இருந்தது தேமுதிக. ஆனால் இன்றைய நிலைமையோ அதற்கு தலைகீழாக உள்ளது.
அண்மைக்காலங்களில் தொடங்கப்பட்ட நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை விட தேமுதிகவின் வாக்கு வங்கி அதலபாதாளத்திற்கு சரிந்துள்ளது. அதற்கு காரணம் கூட்டணி விவகாரத்தில் தலைமை தன்னிச்சையாக எடுத்த முடிவு தான் என்பது ஊரறிந்த செய்தி.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காத குறையாக திமுக தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தது. மறைந்த கருணாநிதி தன் வயதையும், அனுபவத்தையும் கூட பொருட்படுத்தாமல் பழம் நழுவி பாலில் விழும்' என, தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படையாக கூறினார்.
பிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் "போர்வாள்" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்?
நல்ல பிள்ளைகளாக மாறிய கட்சிகள்
ஆனால் அதற்கு மாறாக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தேமுதிக. அன்று தொடங்கிய தேமுதிகவின் சரிவு இன்னும் சீராகவில்லை. முதல்வர் ஆசைக் கூறி விஜயகாந்தை அன்று உசுப்பிவிட்ட மதிமுக, இந்திய கம்யூ, மார்க்சிஸ்ட் கம்யூ. உள்ளிட்ட கட்சிகள் திமுக முகாமுக்கு தாவி தலா 2 எம்.பி.க்களை பெற்று நல்லபிள்ளைகளாகி விட்டன.
தேறாத தேமுதிக
ஜி.கே.வாசனும் அதிமுக முகாமில் அடைக்கலமாகிவிட்டார். பாவம் தனித்துவிடப்பட்டது என்னவோ தேமுதிக தான். இதனை எல்.கே.சுதீஷும், பிரேமலதாவும் உணர்ந்தார்களா எனத் தெரியவில்லை. உணர்ந்திருந்தால் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்து தங்கள் கட்சிக்கு குறைந்தது 3 எம்.பி.க்களையாவது பெற்றிருப்பார்கள்.
பாமகவை பகைத்துக் கொண்டு
ஆனால் பா.ம.க.வை போட்டியாக கருதிக்கொண்டு அதிக சீட்களை பெற வேண்டும் என்பதில் மட்டும் பிடிவாதம் பிடித்த பிரேமலதா, அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. அப்படி செலுத்தியிருந்தால் முதலில் கவுரமாக அழைத்தபோதே திமுக கூட்டணியில் இணைந்திருப்பார்.
பிரேமலதா குழப்பம்
மக்களவைத் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க முடியாத அளவுக்கு பிரேமலதா குழப்பத்தில் இருந்ததால், அதிமுக கூட்டணியிலும் தேமுதிகவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. வெற்றிவாய்ப்பில்லை எனத் தெரிந்தும் வடசென்னை, திருச்சி, தொகுதிகளை பெற அவர் எப்படி ஒப்புக்கொண்டார் என இதுவரை தெரியவில்லை.
அதிமுக கூட்டணி
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தேமுதிக தனக்கான தனித்துவத்தை மக்கள் மத்தியில் இழந்து வருவதால் அக்கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறத் தொடங்கிவிட்டனர். நேற்று முன் தினம் கூடட குமரி மாவட்ட நிர்வாகி ஓட்டம் பிடித்துள்ளார்.
போராட்டம் இல்லை
மக்கள் பிரச்சனைகளுக்காக தேமுதிக சார்பில் தமிழகத்தில் எங்கும் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ அண்மையில் நடந்ததாக நினைவில்லை. பாஜக கூட்டணியில் இருந்தாலும் கூட, மத்திய பட்ஜெட்டை விமர்சித்து அறிக்கை விடுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால் பிரேமலதாவோ அதைப்பற்றி கிஞ்சிற்றும் வாய்திறக்கவில்லை.
தேய் பிறையாகிறது
இப்படி கூறினால் கூறிக்கொண்டே போகலாம், தேய்பிறையாகும் தேமுதிகவை வளர்பிறையாக கொண்டும் செல்லும் நடவடிக்கைகளை பிரேமலதா தொடங்கினால் மட்டுமே, அடுத்த தேர்தலில் கூட்டணிக்கு விரும்பி அழைக்கப்படும் விருந்தாளியாக தேமுதிக இருக்கும். ஆனால் தேமுதிகவின் வளர்ச்சி குறித்து தேமுதிக தலைமைக்கே ஆர்வம் இல்லாதது போலத்தான் தோன்றுகிறது.