ஏன் தேமுதிக தனித்து போட்டி? பிரேமலதாவின் பல்ட்டிக்கு என்ன காரணம்.. திமுகவுடன் மீண்டும் ரகசிய பேச்சா?
தனித்து போட்டி என்று பிரேமலதா விஜயகாந்த் சொன்னது விவாதத்தை கிளப்பி உள்ளது
சென்னை: தேர்தல் ஜூரம் வந்துவிட்டது.. அதனால் பழைய மாதிரியே மறுபடியும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது தேமுதிக.. "தனித்து போட்டி" என்ற ஒத்த வார்த்தையை தெறிக்க விட்டு போயுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்!
கடந்த 2016 தேர்தலில், திமுகவுடன் கூட்டணி வைக்காமல் போனதன் விளைவினை இன்னமும் தேமுதிக அறுவடை செய்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
சொல்ல சொல்ல கேட்காமல் பிரேமலதா பேச்சை கேட்டு மக்கள் நலகூட்டணியில் விஜயகாந்த் இணைந்ததும், அதற்கு பிறகு எல்லாருமே அக்கட்சியில் டெபாசிட்டை இழந்தனர் என்பதும் அனைவரும் அறிந்த கடந்த கால தேமுதிக அரசியல்தான்.
ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து கோவிஷீல்ட்.. தமிழகத்தில் பரிசோதிக்க.. முதல்வர் எடப்பாடி அனுமதி!
தேமுதிக
ஆனால், அதோடு சரி.. கடந்த எம்பி தேர்தலில், திமுக, அதிமுக, அமமுக, பாமக, போன்ற கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சின்போதுகூட தேமுதிகவை யாருமே கண்டுகொள்ளவில்லை.. தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்து போனதும், விஜயகாந்த் உடல்நிலை மோசமானதுமே இதற்கு காரணம்.
விஜயகாந்த்
விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லாமல் சிகிச்சையில் இருந்த இத்தனை வருஷமும், தேமுதிக எந்த மாதிரியான களப்பணிகளை கையில் எடுத்துள்ளது? எத்தனை போராட்டத்தை முன்னெடுத்துள்ளது? எத்தனை பிரச்சனைகளில் மக்களுடன் கை கோர்த்துள்ளது? உறுப்பினர்களின் எண்ணிக்கையை எந்த அளவுக்கு வலுவாக வைத்துள்ளது? என்றெல்லாம் எதுவுமே இதுவரை தெரியவில்லை... ஆனால் வெள்ளம், புயல் சமயங்களில் பிரேமலதா, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று உதவியதையும் நன்றியுடன் நாம் இங்கு நினைகூர வேண்டி உள்ளது.
பிரேமலதா
தேமுதிகவை பொறுத்தவரை அது விஜயகாந்த்தின் கட்சியாக மட்டுமே மக்களால் பார்க்கப்படும் ஒரு கட்சி. அவர் தான் அக்கட்சியின் முகம் பலம் எல்லாமே.. அவரே பலவீனமாக இருக்கும்போது யாரை நம்பியும் அக்கட்சிக்கு ஓட்டுப் போட மக்கள் தயாரில்லை. காரணம் பிரேமலதாவையோ அல்லது சுதீஷையோ அவர்கள் விஜயகாந்த் இடத்தில் வைத்துப் பார்க்க தயாராகவே இல்லை. இதுதான் நிதர்சனம். இதனால்தான் விஜயகாந்த் என்று பலம் இழந்தாரோ அன்றே அக்கட்சியும் பலவீனமாகி விட்டது.
ஜெயலலிதா
உண்மையைச் சொல்வதாக இருந்தால் ஜெயலலிதாவின் கடைசிக் காலத்திலேயே தேமுதிகவின் முடிவும் தொடங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் விஜயகாந்த் பழைய விஜயகாந்த்தாக மாறி வந்தால்தான் இந்தக் கட்சிக்குரிய பலம் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதே தவிர மற்றபடி இது பத்தோடு பதினொன்றாகவே இருக்க முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்போது எல்லாருமே சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர்.. அதற்கான வேலையிலும் இறங்கி உள்ளனர்.
தேமுதிக
தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறது தேமுதிக.. ஆனால், நல்ல உறவு இருப்பது போல தெரியவில்லை.. அதேநேரத்தில் பகிரங்கமான உரசலும் தென்படவில்லை. சுதீஷூக்கு சீட் தரேன்னு சொல்லிட்டு தராமல் போய்விட்டதாக பிரேமலதா அன்று வருத்தத்தை வெளிப்படுத்த, நாங்க எங்கே அப்படி சொன்னோம்? என்று ஜெயக்குமார் பதில் சொல்லி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.. அதற்கு பிறகு இணக்கமான போக்கு அதிமுகவுடன் தேமுதிகவுக்கு இல்லை.
சுதீஷ்
அதேசமயம், ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே பாஜகவுடன் நல்ல உறவு உள்ளது.. சுதீஷூக்கு டெல்லி மேலிடம் நெருக்கமாக உள்ளது.. இதற்கெல்லாம் காரணம், பிரதமர் மோடிக்கு விஜயகாந்த்தை எப்போதுமே பிடிக்கும் என்பதுதான்.. அதனால்தான், கடந்த முறை கூட்டணியில் தேமுதிக சீட் விவகாரத்தில் அதிமுக கண்டுகொள்ளாமல் போனபோது, பாஜகதான் வந்து சமாதானம் பேசியது... தேமுதிகவை கூட்டணியில் சேர்த்து கொள்ளுமாறு சப்போர்ட்டுக்கு வரவும்தான், கடைசி நேரத்தில் இணைத்து கொள்ளப்பட்டது.
தனித்து போட்டி
இவ்வளவு நடந்தும், தேமுதிக வரப்போகிற தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது.. இதற்கு என்ன காரணம்? அதிமுகவுடன் நிஜமாகவே மொத்தமாக உறவு சுணக்கமாக இல்லை என்பதா, அல்லது சீட் அதிகமாக வேண்டும் என்பதற்கான காய் நகர்த்தலா இது? என்பது தெரியவில்லை.. தனித்து போட்டி என்றால், அதிமுக பதறி கொண்டு வந்து கூட்டணி விஷயமாக பேசும் என்று தேமுதிக எதிர்பார்க்கிறதா என்றும் தெரியவில்லை.. ஆனால் நிச்சயம் அதிமுக பதறாது, ஓடி வராது, தேடி வராது என்பதே நிதர்சனம்.
திமுக
அதேபோல, திமுகவுடன் ரகசிய பேச்சு என்ற ஒரு செய்தி சமீபத்தில் கசிந்தது.. போன முறையே, அதிமுகவுடன் பேசிக் கொண்டு திமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதை தமிழகமே வேடிக்கை பார்த்தது.. விஜயகாந்த் கஷ்டப்பட்டு கட்டி காப்பாத்தின மானத்தை ஒரே நாளில் மொத்தமாக சுதீஷ் அன்று வாங்கிவிட்டார்.. அந்த நாளில்தான் தேமுதிக மொத்தமாக மக்களிடம் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு நின்றது. துரைமுருகன் புண்ணியத்தால் தேமுதிகவின் பெயர் அன்று மொத்தமாக டேமேஜ் ஆனது.
சீட் பேரம்
இருந்தாலும், திமுகவுடன் பேச்சுவார்த்தை இந்த முறையும் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.. இத்தனை சீட் தருவதாக திமுக தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டதாகவும் கூட செய்திகள் கூறின. ஆனால் நேற்றுகூட ஸ்டாலினை விமர்சித்திருந்தார் பிரேமலதா... 10 வருஷம் ஆட்சியை பிடிக்காத நிலையில், இந்த முறையாவது முதல்வர் சீட்டை பிடித்துவிடும் முனைப்பில் திமுக இருக்கிறது.. அதனால், தேமுதிகவை சரிக்கட்டி தன்னுடன் அழைத்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அரசியலில் யாருக்கும் வெட்கம் கிடையாது என்பதால் தேமுதிகவினர் திட்டியதையெல்லாம் திமுகவினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
துரைமுருகன்
தேவைப்பட்டால் இந்த விஷயத்தில் துரைமுருகனைக் கூட ஓரம் கட்டி வைத்து விட்டு கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டு வரக் கூட திமுக தயங்காது என்றும் சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாகவே என்னுடைய இனிய நண்பரர் என்று மு.க.ஸ்டாலின் நேற்று இறங்கி வந்ததைக் கூறுகிறார்கள். விஜயகாந்த்துக்கு நேற்று ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருந்தார்.. எப்பவுமே ஸ்டாலினுக்கு விஜயகாந்த்தை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும்.. அதனால், 2016-ல் தவற விட்டதை இந்த முறை தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்து சரி செய்யுமா என்பதும் பெரிய எதிர்பார்ப்புதான்!
கூட்டணியா? தனித்து போட்டியா?
கடந்த முறை தேர்தலுக்கு முன்பாக, தேமுதிக கோயம்பேடு ஆபீசில் ஒரு கூட்டம் நடந்தது.. அப்போது எல்லாருமே விஜயகாந்திடம் "நாம தனியாவே நிக்கலாமே.. யாருடனும் கூட்டணி வேணாம்.." என்று நிர்வாகிகள் பலர் கேட்டு கொண்டதாகவும் தகவல்கள் வந்தன.. அதுபோலவே, இப்போதும் தனித்து போட்டி என்கிறார்களாம்.. "தனித்து போட்டி" என்று பிரேமலதா விட்ட நூல் திமுகவுக்கா? அதிமுகவுக்கா? என்றுதான் தெரியவில்லை.. ஆனால் தேமுதிகவால் என்றைக்குமே தனித்து போட்டடியிட முடியாது என்பதே நிகழ்கால மற்றும் வருங்கால உண்மை!