பேரம் பேசுவதில் பாமகவுக்கு செம டப் கொடுக்கிறதே தேமுதிக.. திமுக, அதிமுகவுடன் அதிரடி பேச்சு!
தேமுதிக-பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
சென்னை: அதிமுக, பாஜகவுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது தேமுதிக. கூட்டணி தொடர்பாக இன்னும் இழுபறியே நீடிக்கிறது என்று சொன்னாலும் தனது கெத்தை விடுவதாக இல்லை அக்கட்சி.
பாமகவோடு ஒப்பிடும்போது தேமுதிகவை குறைவாகவே எடை போட்டது ஆளும் தரப்பு. ஆனால் நாங்கள் மட்டும் என்ன அவங்களுக்கு சளைத்தவர்களா என்று விட்டு கொடுக்காமல் பேரத்தை தொடர்ந்து வருகிறது தேமுதிக.
பேரம் என்பது சீட் எண்ணிக்கை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட வைட்டமின் 'ப'வும் சேர்த்ததுதான். பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும், என்றால் வெறும் 5 வாங்கி கொள்ள எங்களால் முடியாது என்கிறது தேமுதிக தரப்பு.
பேச்சுவார்த்தை
இந்த கறார் தன்மையை விஜயகாந்த் காட்ட 2 காரணங்கள் உண்டு. ஒன்று, திமுக தனியாக தேமுதிகவிடம் பேச்சு நடத்தி வருகிறது. மற்றொரு பக்கம் அமமுக ஏற்கனவே பேச்சை தொடங்கி விட்டது. இதனால் கையை பிசைந்து நிற்கிறது அதிமுக.
நிலைமை மோசம்
ஆனால் இதைவிட பரிதாப நிலை பாஜகவுக்குதான். தேமுதிக பாஜகவில் இணையவில்லை என்றால் பலம் குறைந்து, தமிழகத்தில் இன்னும் நிலைமை மோசமாகிவிடும் என்று அது கருதுகிறது (தேமுதிக வந்தால் மட்டும் பலம் கூடி விடுமா என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது).
கதி கலங்கி உள்ளது
இதனால்தான் அனைவரையும் சுத்தலில் விட்டுள்ளார் விஜயகாந்த். தேமுதிக பலம் குறைந்துவிட்டது, செல்வாக்கை இழந்து விட்டது என்று யார் சொன்னது? "கேப்டன்" நடத்தி கொண்டிருக்கும் டீலால் கதி கலங்கி உள்ளது பாஜகவும், அதிமுகவும்.
பாமக
கொடுப்பதை வாங்கி கொள்ளும் என்று தேமுதிகவை எடை போட்டவர்கள் இன்று மிரண்டு கிடக்கிறார்கள். 3-வது நாளாக ஒரு தேசிய கட்சியும், மாநில ஆளும் கட்சியையும் பேச்சுவார்த்தை நடத்தியும் ஒன்றும் மசிய வைக்க முடியவில்லை. 2 மாதமாக பாமகதான் அதிமுக-பாஜகவுக்கு தண்ணி காட்டி கொண்டிருக்கிறது என்றால் விஜயகாந்த் இப்போது பேரம் பேசுவதில் இரண்டே நாளில் பாமகவையும் மிஞ்சி கொண்டிருக்கிறார்.