40 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியா? விருப்பமனு கேட்டு, விஜயகாந்த் திடீர் அறிவிப்பு
சென்னை: தமிழகம் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர், நாளை மறுநாள் முதல் விருப்பமனு வழங்கலாம் என்று அக்கட்சி தலைமை அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கு பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆரம்பத்தில் 9 தொகுதிகளை கேட்ட தேமுதிக, தனது பிடிவாதத்தை தளர்த்தி ஐந்து தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது. ஆனால் அதிமுக அத்தனை தொகுதிகளை ஒதுக்குவதற்கு யோசித்து வருவதாக கூறப்பட்டது.
திருநாவுக்கரசருடன் சந்திப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் நேற்று சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் அவரைச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அரசியல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக திருநாவுக்கரசர் பின்பு சூசகமாக தெரிவித்தார்.
கூட்டணி மாறுகிறாரா?
இதனால் திமுக கூட்டணி பக்கம் விஜயகாந்த் செல்வார் என்ற எதிர்பார்ப்பு, அதிமுக வட்டாரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியது. எனவே 5 தொகுதிகளை தேமுதிகவுக்கு வழங்கி விடலாம் என்று அதிமுகவில் ஒரு தரப்பினரும் தங்கள் தலைமையிடம் கூறத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
திடீர் அறிவிப்பு
இருப்பினும் தேமுதிக தலைமையிடம், அதிமுக தலைவர்கள் யாரும் இதுவரை தொடர்பு கொண்டு தாங்கள் வழங்கும் ஆஃபர் குறித்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் 24ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித்துப் போட்டியா
40 தொகுதிகளுக்கும் விருப்பமனு வாங்குவதை பார்த்தால் தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வியடைந்து வரும், தேமுதிக தனித்துப் போட்டியிடுவது என்பது இயலாத காரியம். அதற்கேற்ப நிதி வசதியும் தற்போது கட்சியில் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக தலைவருக்கு ஷாக் கொடுப்பதுதான் விஜயகாந்த் கட்சியின் திட்டமாக இருக்கும் என்று தெரிகிறது.