நேற்று கந்த சஷ்டி - இன்று கலாம் நினைவு நிகழ்வு- உற்சாக விஜயகாந்த்.. அந்த ஒத்தை சீட் கிடைச்சிரும்ல?!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடுத்தடுத்து ஆக்டிவ்வாக செயல்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருவது அக்கட்சியினரை உற்சாகமடைய வைத்திருக்கிறது.
தமிழக அரசியல் களத்தில் பிரவேசித்து அடுத்தடுத்து ஏறுமுகம் கண்டு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது தேமுதிக. ஆனால் தேர்தல் நேர கூட்டணி வியூகங்களில் மிகவும் மோசமாக சறுக்கியதால் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்ற நிலைமையில் உள்ளது அந்த கட்சி.
அதுவும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரால் ஆக்டிவ் அரசியலில் ஈடுபட முடியாத நிலை உருவானது. இது தேமுதிகவினரின் உற்சாகத்தை வெகுவாகவே பாதித்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கி உள்ளன.
தமிழக வக்பு வாரியம் கலைப்பு.. சிறுபான்மை நலத்துறை பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
தேர்தல் பணிகளில் கட்சிகள்
கொரோனா லாக்டவுன் காலமாக இருந்தபோதும் கூட கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துவது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணக்கமாக இருப்பது, தொகுதி பங்கீடு தொடர்பாக உட்கட்சி ஆலோசனை என ஒவ்வொரு கட்டமாக கட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அதிமுகவில் அண்மையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த 1 ராஜ்யசபா சீட் கொள்கை
இந்த பின்னணியில் சட்டசபை தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும்? என்கிற கேள்வியும் அரசியல் களத்தில் இருந்து வருகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல் 1 ராஜ்யசபா சீட் பிளஸ் சொற்ப சீட்டுகள் என்பதை மட்டுமே கொள்கையாக வைத்துக் கொண்டு பேரம் பேசுகிற கட்சியாக தலைகீழாகிப் போய்விட்டது இந்த கட்சி. தமிழக அரசியலில் கூட்டணி மாறி கட்சியாக பெயரைப் பெற்றிருக்கிறது தேமுதிக.
இம்முறையேனும் 1 ராஜ்யசபா சீட்
இருந்தபோதும் அசராமல் இந்த தேர்தலிலாவது அந்த 1 ராஜ்யசபா சீட் ப்ளஸ் சொற்ப சீட்டுகள் என்ற கொள்கையை அடைவதில் தேமுதிக உறுதியாக இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனிடையே திடீரென கந்த சஷ்டி கவசம் படிப்பது தொடர்பான ஒரு வீடியோ வெளியிட்டு மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என கண்டனம் தெரிவித்திருந்தார் விஜயகாந்த். அத்துடன் இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவுநாள். இன்று காலையிலேயே கலாம் வழியை பின்பற்றி நாட்டை முன்னேற்றுவோம் என ட்வீட் போட்டு உள்ளார் விஜயகாந்த்.
மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக திரும்பும் விஜயகாந்த்
கந்த சஷ்டி கவசம் படிப்பது, கலாம் நினைவுநாளை போற்றுவது என அடுத்தடுத்து தாம் ஆக்டிவ்வாக இருப்பதாக விஜயகாந்த் காட்டி வருகிறார். அவரது குரல் பிரச்சனையும் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் கேப்டன் பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வந்து கர்ஜிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என உற்சாகத்தில் மிதக்கின்றனர் தேமுதிக தொண்டர்கள்.