விஜயகாந்த்துக்கு லேசான கொரோனா அறிகுறிதான்- சரியாகிவிட்டது- 2 நாட்களில் வீடு திரும்புவார்: பிரேமலதா
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறிதான் இருந்தது; தற்போது அது சரி செய்யப்பட்ட நிலையில் அடுத்த 2 நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தது. அது சரி செய்யப்பட்டுவிட்டது என கூறப்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று கடந்த 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்திருந்தது.
விஜயகாந்த் உடல் நிலை.. மியாட் ஒன்று சொல்கிறது.. தேமுதிக வேறு சொல்கிறது.. குழம்பி போன தொண்டர்கள்
தேமுதிக அறிக்கையால் குழப்பம்
தேமுதிக அறிக்கையில் விஜயகாந்துக்கு கொரோனா சரி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மியாட் மருத்துவமனை அறிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஜயகாந்த் நலம்
விஜயகாந்துக்கு மிக மிக லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. அவர் தற்போது பூரண உடல்நலத்துடன் நலமுடன் இருக்கிறார்.
அடுத்த வாரம் வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்
அடுத்த ஓரிரு நாட்களிலேயே வீடு திரும்புவார். விஜயகாந்த் வீடு திரும்பிய உடனேயே, அடுத்த வாரம் தேமுதிக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். விஜயகாந்த் உடல்நலம் குறித்து போனில் விசாரித்த முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
கொரோனா எப்படி வந்தது?
தேமுதிக தலைமை கழகம் இது தொடர்பான நன்றி அறிவிப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட உள்ளது. வீட்டில் சென்னை மாநகராட்சி ஊழியர்களை தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்ட வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. அது தவறான தகவல். விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. எங்களது பக்கத்து வீட்டில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. நாங்கள் வீட்டுக்கு வெளியே சிறிது நேரம் அமர்ந்து பேசுவோம். அதுபோன்ற சூழ்நிலைகளால் கொரோனா தொற்று தாக்கியதா எனவும் தெரியவில்லை. இவ்வாறு பிரேமலதா கூறினார்.