விஜயபிரபாகரன் பிறந்தநாள்... தொண்டர்கள் திரண்டு வந்து நேரில் வாழ்த்து
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனின் பிறந்தநாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டின் அருகே ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு அதில் நின்றவாறு தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார் விஜயபிரபாகரன்.
இதுவரை இல்லாத வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் வந்து விஜய பிரபாகரனை வாழ்த்திச் சென்றனர்.
பிறந்தநாள்
தேமுதிக நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளில் அண்மைக்காலமாக அதிக பங்களிப்பு செலுத்துபவர் விஜய பிரபாகரன். விஜயகாந்த்தின் மூத்த மகனான இவர், தமது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தாய் பிரேமலதா விஜயகாந்த்திற்கு அரசியலிலும், கட்சியிலும் பக்கபலமாக துணை நின்று வருகிறார்.
திருமணம்
நாய் வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்ட விஜயபிரபாகரன் டென்னிஸ் விளையாட்டிலும் அதிகம் ஆர்வம் உடையவர். இவருக்கு கடந்தவாரம் தான் கோவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புதுமாப்பிள்ளையான இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அதை அவரது கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நிர்வாகிகள் சந்திப்பு
எப்போதும் தாய், தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்குவதுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ளும் விஜய பிரபகாரன், இந்த ஆண்டு தொண்டர்களையும்ம், நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக்கொண்டார். இதற்காக வீட்டின் அருகே சிறியளவில் மேடை அமைக்கப்பட்டு அதில் நின்று தொண்டர்களை சந்தித்தார். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து பெருமளவில் நிர்வாகிகள் வந்திருந்தனர்.
அன்பு
விஜயபிரபாகரனை சந்தித்து வாழ்த்துக்கூறிய தொண்டர்கள் பலர், கட்சிப்பணிகளில் இன்னும் நீங்க கவனம் செலுத்தனும், என அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு புன்னகையை பதிலாக தந்த விஜயபிரபாகரன், தொண்டர்கள் தந்த மாலை, சால்வைகளை அன்போடு ஏற்றுகொண்டார்.