நமது முதல்வர் விஜயகாந்த்.. சுதீஷின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு!
சென்னை: நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என தனது பேஸ்புக் பக்கத்தில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்கே சுதீஷ் பதிவு போட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்றது. இதையடுத்து 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுத்து வர முயற்சித்ததில் ஜெயலலிதா வென்றார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். இந்த நிலையில் அடுத்து வந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, பாமகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது. இதில் தோல்வியே கண்டது.
தேமுதிக தோல்வி
இதையடுத்து 2016ஆம் ஆண்டிலாவது திமுகவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வைகோவால் உருவான மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டு மிகவும் மோசமான நிலையில் தேமுதிக தோல்வியை தழுவியது. இதையடுத்து 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
தேமுதிக நிலைப்பாடு
ஆனால் அக்கட்சியோ அதிமுகவுடனேயே மீண்டும் கூட்டணி அமைத்தது. ஒற்றை இலக்க எண்ணிக்கை தொகுதிகளை பெற்ற நிலையில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் தேமுதிகவின் பிரேமலதா, விஜயபிரபாகரன் பேசுகையில் தனித்து போட்டியிட தயார் என்கிறார்கள்.
25 தொகுதிகள்
தங்கள் இதுவரை அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவே இல்லை என பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை நேற்று முன் தினம் அமைச்சர்கள் போய் சந்தித்தனர். அப்போது தங்களுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேமுதிக கூறியிருந்தது.
பேச்சுவார்த்தை
இதனிடையே நேற்றைய தினம் பாஜகவுடன் அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முடிவு ஏதும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடந்தது. பாஜகவுடனான பேச்சுவார்த்தை நேற்று முடிந்துவிட்டால் அடுத்தது இன்றைய தினம் நமக்குத்தான் அழைப்பு வரும் என தேமுதிக கருதியிருந்ததாக சொல்லப்படுகிறது.
தலைமையிடம் வெதும்பல்
பேச்சுவார்த்தைக்கு அழைக்க தாமதப்படுத்தியதால் சிறிய கட்சிகளே அதிமுக, திமுக கூட்டணியிலிருந்து விலகி தனி அணியை உருவாக்கிய நிலையில் வாக்கு வங்கி, மக்கள் செல்வாக்கு இருக்கும் தேமுதிக இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சித் தலைமையிடம் வெதும்பியதாக தெரிகிறது.
வெளிப்பாடு
இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தேமுதிக துணை பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மைத்துனருமான எல் கே சுதீஷ் ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நமது முதல்வர் விஜயகாந்த், நமது கொடி, நமது சின்னம் முரசு என தெரிவித்துள்ளார். இது அதிமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தேமுதிக தனித்து தேர்தலை சந்திக்கிறதா இல்லை வேறு யாருடனாவது கூட்டணி அமைக்க போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.