விஜயகாந்தின் மைத்துனர் தேமுதிக செயலர் சுதீஷ் முதல்வர் பழனிச்சாமியுடன் சந்திப்பு
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தேமுதிக துணை செயலர் எல்கே சுதீஷ் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக, திமுக ஆகியவை தலா 3 இடங்களில் வெற்றி பெற முடியும். அதிமுகவிடம் 3ல் ஒரு இடத்தை எப்படியாவது கேட்டு வாங்க வேண்டும் தேமுகதிக பிடிவாதமாக இருக்கிறது.
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், தமிழகத்தில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலைப் பொறுத்தவரை, லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது ஒரு ராஜ்யசபா எம்பி பதவி கொடுப்பதாகக் கூறினார்கள்.
நாங்கள் கூட்டணி தர்மத்தோடு உள்ளோம். இன்னும் இரு தினங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து எங்கள் உரிமையைக் கேட்போம்". என்றார்.
இந்நிலையில் பிரேமலதாவின் தம்பியும் தேமுதிகவின் துணை செயலருமான சுதீஷ் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ராஜ்யசபா எம்பி சீட் தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தாக கூறப்படுகிறது. இதற்கு முதல்வர் என்ன பதில் அளித்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் தேமுதிக இந்த முறை தங்களுக்கு ராஜ்யசபா எம்பி சீட் எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது.